<h2 style="text-align: left;">புதுச்சேரி பெண்ணிடம் ரூ. 1.47 லட்சம் மோசடி</h2>
<p style="text-align: left;">புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர், ஆன்லைனில் கனடாவில் வேலை வாய்ப்பு இருப்பது தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் இருந்த மொபைல் எண்ணை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசிய நபர், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு உள்ளதாக உறுதி அளித்துள்ளார். அதற்காக, விசா செயலாக்க கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதைநம்பிய, அப்பெண் 1 லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் அனுப்பி ஏமாந்தார். இதேபோல், மூலக்குளத்தை சேர்ந்த பெண் 50 ஆயிரம், நல்லவாடு பெண் 42 ஆயிரம், முத்தியால்பேட்டை நபர் 1,845, ரெயின்போ நகரைச் சேர்ந்த நபர் 4 ஆயிரம் என மொத்தம் 5 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 2 லட்சத்தி 45 ஆயிரத்து 345 ரூபாய் இழந்துள்ளனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.</p>
<h2 style="text-align: left;">திருமண ஆசை காட்டி ரூ.3.20 லட்சம் மோசடி</h2>
<p style="text-align: left;">அரியாங்குப்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அவரை மொபைல் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், நன்றாக பேசி பழகியுள்ளார். பின், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும், திருமணத்திற்கு பிறகு ஆஸ்திரேலியா சென்றுவிடலாம் என, ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து, ஆஸ்திரேலியா செல்ல விமான டிக்கெட் எடுப்பதற்காக முன்பணம் அனுப்புமாறு கேட்டுள்ளார். இதனை நம்பிய அப்பெண் மர்மநபருக்கு 3 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாய் அனுப்பியுள்ளார். அதன்பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.</p>
<h2 style="text-align: left;">ஆன்லைனில் முதலீடு 5 லட்சம் மோசடி</h2>
<p style="text-align: left;">தட்டாஞ்சாவடியை சேர்ந்த நபர் ஆன்லைனில் முதலீடு செய்து ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 443, உறுவையாறு சேர்ந்த பெண் 21 ஆயிரம், வில்லியனுாரை சேர்ந்த பெண் 43 ஆயிரத்து 300, லாஸ்பேட்டையை சேர்ந்த நபர் 8 ஆயிரத்து 431, நைனார்மண்டபத்தை சேர்ந்த நபர் 8 ஆயிரத்து 570, தட்டாஞ்சாவடியை சேர்ந்த நபர் ஆயிரம் என, மொத்தம் 7 பேர் மோசடி கும்பலிடம் 5 லட்சத்து 68 ஆயிரத்து 244 ரூபாய் இழந்துள்ளனர்.</p>
<h2 style="text-align: left;">விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்</h2>
<p style="text-align: left;">இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.</p>
<p style="text-align: left;">அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது <span class="skimlinks-unlinked">www.cybercrime.gov.in</span> என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.</p>
<h2 style="text-align: left;">சிக்கிக் கொள்ளாதீங்க... வங்கி ஓடிபி எண் சொல்லாதீங்க</h2>
<p style="text-align: left;">மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.</p>