<p>சேலம் அருகே பள்ளி மாணவர்கள் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் மூன்று சிறுவர்கள் சேர்ந்து ஒரு சிறுவனை கொடூரமாக கொலை செய்து, அதனை வீடியோ எடுத்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. தப்பி ஓட முயன்றவர்களில் இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.</p>
<h2>ஒன்றாக மது குடித்த சிறுவர்கள்</h2>
<p>சேலம் மணியனூரை சேர்ந்த 16 வயது சிறுவன் மல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுவன் மற்றும் மணியனூரில் வசிக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாக இணைந்துள்ளனர். இந்த மூன்று பேரும் சேர்ந்து நேற்று இரவு மல்லூர் அருகே உள்ள கெஜ்ஜல் நாயக்கன்பட்டி காட்டுவளவு பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தபோது, அவர்களுடன் தொடர்புடைய, சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கோகுல் என்பவர் வந்துள்ளார். </p>
<h2>கொலை செய்துவிட்டு வீடியோ எடுத்தனர்</h2>
<p>மதுபோதையில் இருந்த மூன்று சிறுவர்களுக்கும் கோகுலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோகுல் அங்கு மது அருந்திகொண்டிருந்த சிறுவர்களை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள் மூன்று பேரும் சேர்ந்து கோகுலை கத்தியால் சரமாரியாக குத்தியும், முகத்தை சிதைத்தும் கொலை செய்துள்ளனர். பின்னர் சிறுவனின் உடலை வைத்து வீடியோ எடுத்து கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்த நிலையில், மூன்று சிறுவர்களும் அங்கிருந்து ஓட முயன்றுள்ளனர். அவர்களில் இரண்டு சிறுவர்களை பொதுமக்கள் பிடித்து மல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான கோகுலின் உடலை மல்லூர் போலீசார் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/gk/do-you-know-of-a-breed-of-chicken-that-lays-the-most-eggs-259815" width="631" height="381" scrolling="no"></iframe></p>