<p dir="ltr" style="text-align: justify;">"அன்புமணி நடை பயணத்தால் வட மாவட்டங்களில், சட்ட ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும் என ராமதாஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், அன்புமணியின் நடை பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது"</p>
<h3 dir="ltr" style="text-align: justify;">அன்புமணியின் நடைபயணம்</h3>
<p dir="ltr" style="text-align: justify;">செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், சாமி தரிசனம் செய்துவிட்டு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கினார்.</p>
<p dir="ltr" style="text-align: justify;">இன்று தொடங்கி தமிழ்நாடு நாளான நவம்பர் 1 ஆம் தேதி வரை <strong>"தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்"</strong> என்கிற தலைப்பில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 10 உரிமைகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இந்த பிரச்சாரத்தை அன்புமணி ராமதாஸ் தொடங்கியுள்ளார். </p>
<p dir="ltr" style="text-align: justify;">இன்று திருப்போரூரில் தொடங்கிய நடை பயணம் 100-வது நாளில் தர்மபுரியில் நிறைவு பெறுகிறது. திருப்போரூர் கந்தசாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு நடைபயணத்தை தொடங்கி, பொதுமக்களிடம் துண்டு பிரசூரங்களை வழங்கினார். அடுத்ததாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, திருப்போரூர் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.</p>
<h3 dir="ltr" style="text-align: justify;">சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பு </h3>
<p dir="ltr" style="text-align: justify;">தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாடு மீனவர் பேரவை நிறுவனத் தலைவர் அன்பழகனார், ஓய்வு பெற்ற வணிகத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர் சங்கம் தலைவர் வைத்தியநாதன், புரட்சி பாரதம் கொள்கை பரப்புச் செயலாளர் சிவலிங்கம் உள்ளிட்டர் பங்கேற்றனர். மேலும், பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகுமார், சதாசிவம் மற்றும் வெங்கடேசன், பாமகவின் வழக்கு மண்டல செயலாளர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
<h3 dir="ltr" style="text-align: justify;">அனுமதி மறுப்பு </h3>
<p dir="ltr" style="text-align: justify;">இன்று திருப்போரூர் முடிந்த பிறகு, நாளை செங்கல்பட்டு மற்றும் உத்திரமேரூர் ஆகிய தொகுதிகளுக்கு, நடை பயணம் மேற்கொள்ள இருந்தார். இந்தநிலையில் அன்புமணியின் நடை பயணத்திற்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. </p>
<p dir="ltr" style="text-align: justify;">ஏற்கனவே, பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு அன்புமணியின் நடை பயணத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது அனுமதி வழங்கினால், வட மாவட்டங்களில் பதற்றம் ஏற்படும் என ராமதாஸ் தரப்பு டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். எனவே அன்புமணி ராமதாஸின் நடை பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டு இருந்தனர். </p>
<p dir="ltr" style="text-align: justify;">இந்தநிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கமிஷனர்களுக்கு தமிழக டி.ஜி.பி., உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் அன்புமணி ராமதாஸ் நடத்தும், அனைத்து நடைபயணம், ரோட் ஷோ, பொதுக்கூட்டம் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என டி.ஜி.பி., கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதன் மூலம் 100 நாட்கள் நடைபெறும் மேற்கொள்ள இருந்த அன்புமணி ராமதாஸுக்கு முதல் நாளே சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அன்புமணி ராமதாஸ் தடையை மீறி நடை பயணம் மேற்கொள்ள முயற்சி எடுத்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>