<p>பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 50 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் நடத்தப்பட்ட பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியால் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளியே வந்துள்ளது.</p>
<p>கோத்தகிரியைச் சேர்ந்தவர் 50 வயதான செந்தில் குமார். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். 23 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தவர், கடந்த ஜூன் மாதத்தில் இந்த அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளார்.</p>
<h2><strong>பாலியல் தொல்லை</strong></h2>
<p>அறிவியல் ஆசிரியரான அவர், மாணவிகளிடம்‌ தவறான தொடுதலில் ஈடுபட்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இது தவறே என்று தெரியாத மாணவிகள், அதை சகித்து வந்திருக்கின்றனர்.</p>
<p>சிலர் வெளியே சொல்ல முயற்சி செய்வதை அறிந்து, அந்த மாணவிகளை மிரட்டி உள்ளார். இதற்கிடையே மாணவிகளை முத்தமிடுதல், தவறான தொடுதல் என ஆசிரியர் செந்தில் குமார் எல்லை மீறியதாகத் தெரிகிறது.</p>
<h2><strong> பாலியல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி</strong></h2>
<p>இதற்கிடையே காவல்துறை சார்பில், சம்பந்தப்பட்ட பள்ளியில் குட் டச், பேட் டச் பற்றிய பாலியல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர் செந்தில் குமார் நிகழ்த்திய கொடூரங்கள் குறித்து 6ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தைரியமாக வெளியே சொல்லியுள்ளார். </p>
<p>இதன் அடிப்படையில் அந்த மாணவி மற்றும் சக மாணவிகளிடையே காவல்துறை ரகசிய விசாரணை நடத்தியுள்ளது. இதில், செந்தில் குமார் 20 -க்கும் அதிகமான மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்துள்ள்ளது. ஆசிரியர் செந்தில் குமார் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.</p>
<p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/24/03b2adaead5d93bc9e80899ca66fad3c1721810815088785_original.jpg" width="720" /></p>
<h2><strong>மற்ற பள்ளிகளிலும் விசாரணை</strong></h2>
<p>அவர் பணியாற்றிய மற்ற பள்ளிகளிலும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>