<p>Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியீட்டு விழா சென்னை நகரில் உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், ஊடகத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்வில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி கௌர், நடிகர் விஜய் சேதுபதி, உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று ஊடகங்களையும் ரசிகர்களையும் சந்தித்தனர். டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள “ஸ்லம் டாக்” திரைப்படம் குறித்து நிகழ்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன. பூரி ஜெகன்நாத் உடன் பணியாற்றிய அனுபவம் பற்றி விஜய் சேதுபதி பகிர்ந்துகொண்டார். </p>
<h2>பூரி ஜெகன்நாத் பற்றி விஜய் சேதுபதி </h2>
<p>“இங்கு வந்திருக்கும் ஊடக நண்பர்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த படக்குழுவில் உள்ள அனைவரும் படத்தைப் பற்றியும், தங்களது அனுபவங்களைப் பற்றியும் மிகவும் அழகாக பகிர்ந்து கொண்டார்கள். அதை கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.</p>
<p>முதலில் துனியா <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> சாரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்றபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரை நான் நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். கன்னடத்தில் அவர் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தபோது, மிகவும் ஒழுக்கமான, அர்ப்பணிப்பான நடிகராக இருந்தார். இயக்குநர் சொல்வதை முழுமையாகக் கேட்டு, அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக தயார் செய்து கொள்வார். அவர் ஒரு சிறந்த மனிதர், அற்புதமான நடிகர். அவருடன் பணியாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது.</p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/si4xE8G7rYo?si=xvkZDLGGFhGFDjtm" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>விடிவி கணேஷ் சாருக்கு என் நன்றிகள். அவரைப் பற்றி எனக்கு இருந்த எண்ணம் வேறு, ஆனால் அவருடன் இணைந்து நடித்த பிறகு அவருடைய நடிப்பு திறமையை இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு காட்சியை எப்படி இன்னும் சிறப்பாக மாற்றலாம் என்பதில் எப்போதும் ஆர்வமாக இருப்பார். படப்பிடிப்பு தளத்திலும், திரையிலும் அனைவரையும் மகிழ்விக்கக் கூடிய ஒரு அற்புதமான கலைஞர். அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் உற்சாகம் இருக்கும்.</p>
<p>சம்யுக்தாவுக்கு நன்றி. மிகவும் திறமையான மற்றும் புத்திசாலித்தனமான நடிகை. ஒரு கதாபாத்திரத்தை விரைவாகப் புரிந்து கொண்டு, அதை மிக இயல்பாக வெளிப்படுத்தும் திறமை அவருக்கு இருக்கிறது. படத்திற்காக அவர் எடுத்த முயற்சியும், அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது. இன்று இந்த மேடையில் அவர் பேசிய விதமும் மிகவும் அழகாக இருந்தது.</p>
<p>இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். நான் தற்போது டீசர் இசையை மட்டுமே கேட்டிருக்கிறேன். அது மிகவும் சிறப்பாக இருந்தது. படத்தின் முழு இசை ரசிகர்களை வெகுவாக கவரும் என்று நம்புகிறேன்.</p>
<p>“முதலில் சார்மி மேடத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். படப்பிடிப்பு தளத்தில் எவ்வளவு பெரிய சவால்கள் இருந்தாலும், அதை மிகுந்த அமைதியுடனும் உறுதியுடனும் கையாண்டார். ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், முழு படத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக செயல்பட்டார். இயக்குநருக்கு என்ன தேவை, அதை எப்படி சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவார். இன்று நீங்கள் திரையில் பார்க்கப் போகும் இந்தப் படத்தின் தரத்தில் அவருடைய பங்கு மிகப்பெரியது. அவருடைய மன உறுதியையும், அர்ப்பணிப்பையும் நான் மிகவும் மதிக்கிறேன்.”</p>
<p>“பூரி ஜெகன்நாத் சார் ஒரு வரலாறு. அவருடைய சினிமா பயணமும், வாழ்க்கை அனுபவங்களும் மிகவும் ஊக்கமளிப்பவை. பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். ஒரு கதையை முடித்தவுடன் அடுத்த கதையைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காலத்திலும் அவர் பல கதைகளை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு கதையும் தனித்துவமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது.”</p>
<p>“ஒரு காட்சியை உருவாக்குவதிலும், அதை திரையில் வெளிப்படுத்துவதிலும் அவருக்கு இருக்கும் தெளிவு அபாரமானது. அவருக்கு என்ன வேண்டும், ஒரு ஃபிரேமில் என்ன இருக்க வேண்டும், எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த தெளிவு இருக்கும். அப்படிப்பட்ட இயக்குநருடன் பணியாற்றும்போது ஒரு நடிகராக நமக்கு மிகுந்த நம்பிக்கையும், பாதுகாப்பான உணர்வும் கிடைக்கும். ‘நீங்கள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள்’ என்ற நம்பிக்கையை அவர் எப்போதும் கொடுப்பார்.”</p>
<p>படம் மிகவும் வலுவான கதையுடன் உருவாகியுள்ளது. ஆக்சன், உணர்வுகள், மனித உறவுகள் என அனைத்தும் இதில் இருக்கின்றன. பூரி ஜெகன்நாத் சாரின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘ஸ்லம் டாக்’ இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தில் அவருடைய ஈடுபாடும், நம்பிக்கையும், உழைப்பும் மிகத் தெளிவாக தெரிகிறது.”</p>
<p>“இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை நான் மிகவும் ரசித்தேன். இயக்குநர் மற்றும் நடிகர் இடையே உருவாகும் அந்த நம்பிக்கையும், புரிதலும் இந்தப் படத்தில் மிகவும் அழகாக அமைந்தது. பூரி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் இருக்கிறது. அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.”</p>
<p>”‘ஸ்லம் டாக்’ திரைப்படம் அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த படத்திற்காக உழைத்த இயக்குநர் பூரி ஜெகன்நாத் சார், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்‘</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/entertainment/peddi-heroine-janhvi-kapoor-photos-263030" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p> </p>
<p><br /><br /></p>