<p style="text-align: justify;">காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழைப் பொழிவு மற்றும் தொடர்ச்சியான மேகமூட்டம் காரணமாக, நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகளின் செயல்பாடு அதிகரித்துள்ளது. காற்றின் ஈரப்பதம் 90% முதல் 97% வரை உயர்ந்துள்ள நிலையில், விவசாயிகள் மத்தியில் இலைசுருட்டுப்புழு, ஆனைக்கொம்பன் ஈ மற்றும் தண்டு துளைப்பான் ஆகியவற்றின் தாக்குதல் பரவலாகக் காணப்படுகிறது. இந்தப் பூச்சித் தாக்குதல்களின் அறிகுறிகள் மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து, காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் (மாதூர்) விரிவான செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">பூச்சித் தாக்குதலின் அறிகுறிகள்</h3>
<p style="text-align: justify;">வேளாண் அறிவியல் நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, விவசாயிகள் தங்கள் வயல்களில் காணப்படும் பூச்சித் தாக்குதல் அறிகுறிகளை அடையாளம் காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:</p>
<h3 style="text-align: justify;"><strong>இலைசுருட்டுப்புழு தாக்குதல்</strong></h3>
<ul>
<li style="text-align: justify;">நெல் இலைகள் நீளவாக்கில் மடக்கப்பட்டிருக்கும்.</li>
<li style="text-align: justify;">புழுக்கள் இலைகளின் பச்சை நிறத் திசுக்களைச் சுரண்டுவதால், இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும்.</li>
<li style="text-align: justify;">தீவிரத் தாக்குதல் ஏற்பட்டால், முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில், காய்ந்தது போல் காட்சியளிக்கும்.</li>
</ul>
<h3 style="text-align: justify;">ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல்</h3>
<ul>
<li style="text-align: justify;">தாக்கப்பட்ட நெல் தூர்கள் வெங்காய இலை போல் அல்லது வெள்ளித்தண்டு போல் தோற்றம் அளிக்கும்.</li>
<li style="text-align: justify;">பயிரின் வளர்ச்சி குன்றி காணப்படும்.</li>
</ul>
<h3 style="text-align: justify;">தண்டு துளைப்பான் தாக்குதல்</h3>
<ul style="list-style-type: square;">
<li>இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டைக் குவியல்கள் காணப்படும்.</li>
<li style="text-align: justify;">தழைப்பருவத்தில் புழுக்கள் தண்டுகளுக்குள் நுழைந்து உட்கொள்வதால், அதன் நடுப்பகுதி காய்ந்துபோய், 'சாவு மையம்' (Dead Heart) உருவாகும்.</li>
<li style="text-align: justify;">நன்கு வளர்ச்சியடைந்த பயிரில்: பால் பிடிக்கும் பருவத்தின்போது தாக்குதல் ஏற்பட்டால், முழு தானியக் கதிர்களும் வெண்மையாகக் காய்ந்து, 'வெண்கதிர்' (White Ear) உருவாகும் அபாயம் உள்ளது.</li>
</ul>
<h3 style="text-align: justify;">ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள்</h3>
<p style="text-align: justify;">இந்தப் பூச்சிகளை திறம்படக் கட்டுப்படுத்த, விவசாயிகள் உடனடியாக ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (Integrated Pest Management - IPM) தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும் என்று வேளாண் அறிவியல் நிலையம் வலியுறுத்தியுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">1. சாகுபடி முறைகள்</h3>
<ul>
<li style="text-align: justify;"><strong>உரப் பயன்பாடு குறைப்பு:</strong> தழைச்சத்து உரங்களான யூரியா மற்றும் அமோனியம் சல்பேட் உரங்களை அதிகமாக இடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக யூரியா, பூச்சித் தாக்குதலை ஊக்குவிக்கும்.</li>
<li style="text-align: justify;"><strong>வயல் வரப்பு சுத்தம்:</strong> வயல் வரப்புகளில் உள்ள களைகளை அகற்றி, வரப்புகளைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.</li>
</ul>
<h3 style="text-align: justify;">2.உயிரியல் மற்றும் இயற்கை கட்டுப்பாட்டு முறைகள்</h3>
<ul>
<li style="text-align: justify;"><strong>ஒட்டுண்ணி விடுதல் (Biological Control):</strong> இலைசுருட்டுப்புழு மற்றும் தண்டு துளைப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, முட்டை ஒட்டுண்ணிகளான ட்ரைகோகிரம்மா கைலோனிஸ் மற்றும் ட்ரைகோகிரம்மா ஜபோனிகம் ஆகியவற்றை விட வேண்டும்.</li>
<li style="text-align: justify;"> பயிர் நடவு செய்த 37, 44 மற்றும் 51 ஆகிய நாட்களில், மொத்தம் மூன்று முறை, ஒரு ஏக்கருக்கு 2 சிசி என்ற அளவில் இந்த ஒட்டுண்ணிகளை வயலில் விட வேண்டும்.</li>
<li style="text-align: justify;"><strong>வேப்பம் பூச்சிவிரட்டி:</strong> வேப்பங்கொட்டை சாறு 5 சதவிகிதம் அல்லது வேப்பெண்ணெய் 3 லிட்டருடன் 200 கிராம் காதி சோப்பைக் கலந்து, 200 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஏக்கருக்குத் தெளிக்க வேண்டும்.</li>
</ul>
<h3 style="text-align: justify;">3.கண்காணிப்பு மற்றும் பொறியமைப்பு</h3>
<p style="text-align: justify;"><strong>விளக்கு பொறி:</strong> பூச்சிகளின் செயல்பாட்டைக் கண்காணிக்க, முடிந்த இடங்களில் ஏக்கருக்கு ஒரு விளக்கு பொறியை அமைக்கலாம்.</p>
<p style="text-align: justify;"><strong>இனக்கவர்ச்சிப் பொறி:</strong> ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறிகளை அமைத்துப் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கண்காணிக்க வேண்டும்.</p>
<h3 style="text-align: justify;">இரசாயனக் கட்டுப்பாடு (தீவிர தாக்குதலுக்கு மட்டும்)</h3>
<p style="text-align: justify;">இலைசுருட்டுப்புழு மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதல் பொருளாதார சேத நிலையை (Economic Threshold Level - ETL) அதாவது 10 சதவிகிதத்திற்கு மேல் தாண்டும்போது மட்டுமே, கீழ்க்கண்ட இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தலாம்:</p>
<p style="text-align: justify;">ஐசோசைக்ளோசீரம் 18.1% எஸ்.சி 40 மில்லி , ஒட்டும் பசை சேர்த்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கவும். </p>
<p style="text-align: justify;">இலைசுருட்டுப்புழு, தண்டு துளைப்பான் சயன்டிரனிலிபுரோல் 16.9% + லுபிநூரான் 16.9% எஸ்.சி | 20 மில்லி ஒட்டும் பசை சேர்த்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கவும். </p>
<p style="text-align: justify;">ஆனைக்கொம்பன் ஈ - பைப்ரோனில் 0.3% ஜி.ஆர் | 10 கிலோ தேவையான மணலுடன் கலந்து வயலில் இடவும். </p>
<p style="text-align: justify;">விவசாயிகள் மேற்கண்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தங்கள் நெல் பயிர்களைப் பூச்சித் தாக்குதலில் இருந்து பாதுகாத்து, நல்ல மகசூல் பெற வேண்டும் என்று காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>