<p>இந்த தொகுதிக்கு சம்பந்தமே இல்லாமல் வேட்பாளர்களை கொண்டு வந்து நிறுத்தியிருக்காங்கன்னு தெரியவில்லை. அதனால் இப்போதே இந்த பிரச்சாரத்தில் என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். - கனிமொழி எம்.பி.</p>
<div dir="auto"><strong>கனிமொழி கருணாநிதி பரப்புரை</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">மதுரை மத்திய தொகுதியில் மீண்டும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல்தியாகராஜன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கனிமொழி கருணாநிதி பரப்புரை மேற்கொண்டார். ”நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து உங்களிடம் ஓட்டு கேட்பவர்கள் இல்லை. தலை நிமிர்ந்து, கடந்த ஐந்தாண்டுகளில் நம்முடைய தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி, உரிமையோடு வாக்கு கேட்கிறோம். மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றியிருக்கிறோம் என்ற நம்பிக்கையோடு உங்கள் முன்னிலையில் நிற்கிறோம். இன்று தமிழ்நாட்டில் ஒரு கோடி 31 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத்தொகையை பெற்று வருகின்றனர். அந்த உரிமையோடு உங்களிடம் வாக்கு கேட்கிறோம். ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளிலேயே “விடியல் பயணம்” திட்டத்தில் கையெழுத்திட்டார் முதலமைச்சர். அதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் மாதத்திற்கு ரூ.800 முதல் ரூ1000 வரை சேமிக்கிறார்கள். “புதுமைப்பெண்” திட்டம் மூலம் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் மாதம் ரூ.1000 பெறுகின்றனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள், மேலும் கிட்டத்தட்ட 4 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் மூலம் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு வீடு தேடி மருத்துவ சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து சாதனைகளையும் சொல்லி, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>மௌனம் காத்ததை மக்கள் மறக்கவில்லை</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">“திமுக ஆட்சி இந்துக்களுக்கு எதுவும் செய்யாது” என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் நான் உங்களிடம் கேட்கிறேன் — 4000க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு செய்த ஆட்சி யார்? 7500 ஏக்கர் கோவில் நிலத்தை மீட்ட ஆட்சி யார்? அது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான். அதே நேரத்தில், எந்த மதத்தினரையும் பாகுபாடு இல்லாமல் சமமாக நடத்தும் ஆட்சி இது. மகளிர் உரிமைத்தொகை வழங்கும்போது, மதம் பார்த்து கொடுக்கவில்லை. எல்லா சமூகத்தினரும் பயன்பெற்றுள்ளனர். தமிழர்களின் உரிமைகள், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாக்கும் ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். தமிழ்நாட்டை காக்க வேண்டிய இந்த தேர்தலில், கீழடி போன்ற இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சி தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. ஆனால் அந்த உண்மைகளை ஏற்க சிலர் தயங்குகிறார்கள். இந்நிலையில், தமிழர்களின் அடையாளத்தையும் எதிர்காலத்தையும் காக்க நாம் ஒன்றிணைய வேண்டும். சிலர் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிரான அரசியலை செய்கிறார்கள். அதற்கு நாம் சரியான பதிலை இந்த தேர்தலில் அளிக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முக்கியமான பிரச்சினைகளில் மௌனம் காத்ததை மக்கள் மறக்கவில்லை. அதே சமயம், தலைவர் மு. கருணாநிதி அவர்கள் கூட்டணி அரசியலிலும் கூட சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாத்தார். இன்று அந்த வழியில் தான் இந்த ஆட்சி நடந்து வருகிறது. மதுரை மத்திய தொகுதியில் பல முக்கியமான பணிகள் செய்யப்பட்டுள்ளன. ரயில்வே மேம்பாலம், சாலை வசதிகள், இளைஞர்களுக்கான தொழில் பயிற்சி போன்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மதுரை மாநகராட்சியில் 23 கோடி ரூபாய் மதிப்பில் 148 சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>எதிர்கால திட்டங்களாக </strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரபு நடை (Heritage Walk), வெள்ளக்கல் பகுதியில் பயோ மைனிங் திட்டம், மதுரையில் செம்மொழிப் பூங்கா, இளைஞர்களுக்கான “முதல்வர் படைப்பகம்” போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும், விவசாயிகளுக்கு இலவச மின்மோட்டார் வழங்கப்படும் போன்ற பல வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் வெறும் வாக்குறுதிகள் அளிக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சி செயலால் நிரூபித்துள்ளது. ஆகையால், தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர, மாநில உரிமைகள் பாதுகாக்க, தமிழர்களின் சுயமரியாதை காக்க — உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து இந்த ஆட்சியை மீண்டும் அமைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</div>
<div dir="auto"> </div>