<p>புதுச்சேரி: அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்து விட்டு எடப்பாடி பழனிசாமி புதுச்சேரியில் இருந்து செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டார். அரசியல் சூழலுக்கு ஏற்ப முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரத்தை அவருக்கு எம்எல்ஏக்கள் அளித்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.</p>
<p>தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், புதுச்சேரியில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<h2>சொகுசு விடுதியில் ரகசிய ஆலோசனை:</h2>
<p>தமிழக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். இவர்களைச் சந்திப்பதற்காக வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு வருகை தந்தார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்களிடம் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இரவு 8.15 மணியளவில் அவர் அங்கிருந்து புறப்பட்டார்.</p>
<h2>எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம்:</h2>
<p>இந்தக் கூட்டத்தின் போது, 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களிடம் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து பெற்றதாகத் தெரிகிறது. குறிப்பாக, தமிழக அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். மாறிவரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப, கட்சியின் நலன் கருதி எந்தவொரு முக்கிய முடிவையும் எடுக்கும் முழு அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக செய்தியாளர்களைச் சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்த முறை எவ்வித பேட்டியும் அளிக்காமல் மௌனமாகப் புறப்பட்டுச் சென்றது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.</p>
<h2>"யார் விஜய்?": புதுச்சேரி அதிமுக செயலர் அன்பழகன் அதிரடி:</h2>
<p>இந்தச் சந்திப்பு குறித்து புதுச்சேரி மாநில அதிமுக செயலர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p>
<p>"புதிய எம்.எல்.ஏ.க்களிடம் பேசிவிட்டு எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். சினிமா நடிகர் விஜய் உடன் அதிமுகவினருக்கு எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. நீங்கள் விஜய்க்கு ஆதரவா எனக் கேட்கிறீர்கள், நாங்கள் 'யார் விஜய்?' எனக் கேட்கிறோம். திமுகவுடன் கூட்டணியா என்பதை நீங்கள் ஸ்டாலினிடம்தான் கேட்க வேண்டும்." மேலும் அவர் பேசுகையில், பதவி வெறிக்காகவே காங்கிரஸார் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், இது ஒரு சந்தர்ப்பவாத அரசியல் என்றும் விமர்சித்தார். தமிழக அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியினரின் பதவி வெறி, தமிழக அரசியலைப் புரட்டிப் போடும் சூழலை உருவாக்கியுள்ளதாகவும், அதைத் தடுக்கும் நோக்கிலேயே எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p>
<h2>அதிமுக ஆட்சி அமையும் வரை காத்திருங்கள்:</h2>
<p>எம்.எல்.ஏ.க்கள் எத்தனை நாட்கள் புதுச்சேரியில் தங்கியிருப்பார்கள் என்ற கேள்விக்கு, "எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் வரை காத்திருக்க வேண்டும்" என அன்பழகன் அதிரடியாகப் பதிலளித்தார். தற்போது சி.வி.சண்முகம் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் பணிகளுக்காகச் சென்றுள்ள நிலையில், மற்ற எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து விடுதியிலேயே தங்கியுள்ளனர். தமிழக அரசியலில் அடுத்தடுத்து நிகழப்போகும் மாற்றங்களுக்கு இந்த புதுச்சேரி சந்திப்பு ஒரு தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.</p>