<p>புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர நிதியுதவி மற்றும் முதியோர் உதவித்தொகையை உயர்த்தி முதல்வர் ரங்கசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.</p>
<p>புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ. 1,000-லிருந்து ரூ. 2,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரும் பிப்ரவரி 7-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். அதேபோல், முதியோர் உதவித்தொகையும் பிப்ரவரி மாதம் முதல் ரூ. 500 உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.</p>
<h2>மருத்துவமனை விரிவாக்கம்</h2>
<p>மாஹே பிராந்தியம், பள்ளூரில் உள்ள சுகாதார மையம் கடந்த 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1970-ல் மகப்பேறு பிரிவு சேர்க்கப்பட்டு, தற்போது 30 படுக்கைகளுடன் இயங்கி வரும் இந்த மருத்துவமனை, அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தயாராகியுள்ளது. தற்போது ரூ. 12.75 கோடி மதிப்பீட்டில், 50 படுக்கைகளுடன் கூடிய 4 மாடி உள்நோயாளிகள் பிரிவு கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.</p>
<p>புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் காணொலி வாயிலாகப் பங்கேற்று, பூமி பூஜை நடத்திப் பணிகளைத் தொடங்கி வைத்தனர். இக்கட்டிடம் ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிகழ்வில் காணொலி மூலம் முதலமைச்சர் ரங்கசாமி பேசியது: “தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனையோ நலத்திட்டங்கள் கொண்டு வந்து முடித்துள்ளது. முதியோர் உதவித் தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்பட உள்ளது. வரும் பிப்ரவரி முதல் உயர்த்தப்பட்ட உதவித்தொகை கிடைக்கும். குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ. 2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 7ம் தேதி முதல் கிடைக்கும். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>கல் வீடு கட்டும் திட்டம் மத்திய அரசின் நிதி உதவி சேர்த்து ரூ.5 லட்சமாக உயர்த்தி முதல் தவணை விரைவில் வழங்கப்பட உள்ளது. கல்வி உதவித் தொகை ரூ.27 கோடி வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் படித்தோருக்கு அனைத்து கல்லூரி படிப்புகளிலும் 10 சதவீத இடஒதுக்கீடு தரப்படும்.</p>
<h2>விரைவில் மடிக்கணினி</h2>
<p>லேப்டாப் வழங்கப்படாமல் இருந்தது. விரைவில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்கான லேப்டாப் 15 நாட்களுக்குள் தரப்படும். அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.</p>
<p>சுமார் 4 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. தற்போது கூட தொடக்கப்பள்ளி ஆசிரியர், செவிலியர், வருவாய்துறை, சுகாதாரத்துறை பணியிடங்களுக்கு பணி ஆணை விரைவில் வழங்கப்படும்” என்றார்.</p>