<p style="text-align: justify;">தஞ்சாவூர்: மத்திய அரசு வேலை வாய்ப்பு உங்களுக்காக வந்திருக்கு. பாரத் எலெக்ட்ரானிக்ஸில் 47 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க. பி.இ., பி.டெக்., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நல்ல வேலை வாய்ப்பு... தஞ்சை மாவட்ட பட்டதாரிகளே மிஸ் பண்ணிடாதீங்க.</p>
<p style="text-align: justify;">பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் 47 பயிற்சி பொறியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கு.. சம்பளம் ரூ.30,000. வரும் நவம்பர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மத்திய அரசின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited - BEL) நிறுவனத்தில், காலியாக உள்ள பயிற்சி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அலுவலகங்களுக்காக மொத்தம் 47 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p>
<p style="text-align: justify;">இது மத்திய அரசு வேலை என்பதால், தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பயிற்சி பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பி.இ/ பி.டெக்/ பி.எஸ்சி பொறியியல் (4 ஆண்டு படிப்பு) / எம்.இ.,/எம்.டெக்.,அல்லது எம்.சி.ஏ., முடித்திருக்க வேண்டும். குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற தொடர்புடைய பிரிவுகளில் முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 30,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.</p>
<p style="text-align: justify;">இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, SC/ ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், தளர்வுக்கு உட்பட்டவர்களும் நம்பிக்கையுடன் விண்ணப்பிக்கலாம்.</p>
<p style="text-align: justify;">இந்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பக் கட்டணம் SC / ST / PwBD பிரிவினருக்கு இல்லை. மற்ற பிரிவினர் ரூ.150/- + 18% GST கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வு முறையானது விண்ணப்பதாரரின் தகுதியை சரியாக மதிப்பிடுவதை உறுதி செய்கிறது.</p>
<p style="text-align: justify;">விண்ணப்ப செயல்முறை கடந்த 21.10.2025 முதல் தொடங்கி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 05.11.2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bel-india.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்வது அவசியம். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த வேலை வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க. </p>