<p><strong>மேம்பாலத்தில் சென்றவரின் முகத்தை கிழித்த மாஞ்சா நூல்</strong></p>
<p>சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் ஜெயின் ( வயது 67 ) இவர் மாதவரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த ஆறு வருடங்களாக வேலை செய்து வருகிறார். கடந்த 22 ஆம் தேதி வேலை முடித்து வீட்டிற்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் மாதவரம் பகுதியில் இருந்து மூலக்கடை மேம்பாலம் வழியாக தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். </p>
<p>அப்போது திடீரென மாஞ்சா நூல் அவரது முகத்தில் பட்டு முகத்தில் பலத்த காயம் அடைந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பிரகாஷ் ஜெயின் அளித்த புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். </p>
<p>மூலக்கடை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த நஸ்ருதீன் ( வயது 34 ) கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் பாபு ( வயது 53 ) அதே பகுதியைச் சேர்ந்த அஸ்மா ( வயது 38 ) என்ற பெண் உட்பட மூன்று பேரை கைது செய்தனர். </p>
<p>இதில் ரமேஷ் பாபு மற்றும் அவரது மகன்கள் ஆன்லைனில் பட்டம் வாங்கி விற்பனை செய்து வருவதும் அஸ்மா என்பவர் ஆந்திராவிலிருந்து பட்டம் மற்றும் மாஞ்சா நூல்களை வாங்கி வந்து கொடுங்கையூர் பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.</p>
<p>இவர்களிடமிருந்து 20 காற்றாடிகள், மாஞ்சா நூல் ஆறு கட்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் ஜோசப் தியாகராஜன் உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர் .</p>