<p>டெல்லியில் இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "கடந்த பத்தாண்டுகளில், மத்திய அரசின் தலைமையின் கீழ் இந்தியாவின் பள்ளிக் கல்வி முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டுள்ளது. </p>
<p>நமது பள்ளிகள் கற்றல் மையங்களாக மட்டுமின்றி, நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் வாய்ப்பு, திறன் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை வழங்கும் இடமாகவும் உள்ளது. அரசின் முயற்சிகள், பள்ளி உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன.</p>
<p><strong>"உந்து சக்தியாக உருவெடுத்த பெண்கள்"</strong></p>
<p>மின்சாரப் பயன்பாடு 53 சதவீதத்திலிருந்து 91.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. கணினிகளுக்கான அணுகல் 24.1%-லிருந்து 57.2% ஆகவும், இணைய வசதிகள் பயன்பாடு 7.3%-லிருந்து 53.9% ஆகவும் அதிகரித்துள்ளன. குடிநீர் கிடைப்பது 83.2% முதல் 98.3% ஆகவும், கை கழுவுதல் வசதிகள் 43.1%-லிருந்து 94.7% ஆகவும் உயர்ந்துள்ளன.</p>
<p>விளையாட்டு மைதானங்கள் 66.9 சதவீதத்தில் இருந்து 82.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. நூலக வசதிகள் 76.4%-லிருந்து 89% ஆக விரிவடைந்துள்ளன. மழைநீர் சேகரிப்பு வசதிகள் 4.2 சதவீதத்தில் இருந்து 28.4 சதவீதமாக உயர்ந்துள்ளன.</p>
<p>2013-14 ஆம் ஆண்டில் ரூ.10,780 ஆக இருந்த ஒரு குழந்தைக்கான செலவு 130%-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது 2021-22 ஆம் ஆண்டில் ரூ.25,043 ஆக உயர்ந்துள்ளது. ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தற்போது 23 இந்திய மொழிகளில் கிடைக்கின்றன.</p>
<p>தீக்ஷா தளத்தில் 126 இந்திய மொழிகள் மற்றும் 7 வெளிநாட்டு மொழிகளில் பன்மொழி மின்-உள்ளடக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரத்யேக கல்வி சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி, தமிழ் மொழி சேனல் ஒன்று தொடங்கப்பட்டது.</p>
<p><strong>மத்திய அமைச்சர் என்ன பேசினார்?</strong></p>
<p>வயது வந்தோர் கல்விக்கான உல்லாஸ்(ULLAS) சேனல் செப்டம்பர் 8ஆம் தேதி துவங்கப்பட்டது. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 64% அதிகரித்துள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பில் சிறப்பாக செயல்படும் மாணவர்களின் எண்ணிக்கை 66% அதிகரித்துள்ளது.</p>
<p>கல்வியில் பெண்கள் ஒரு உந்து சக்தியாக உருவெடுத்துள்ளனர். 2014 முதல் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை 30% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. 2014 மற்றும் 2024 க்கு இடையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களில் 61% க்கும் அதிகமானோர் பெண்கள்.</p>
<p>பெண் ஆசிரியர்கள் இப்போது ஆண் ஆசிரியர்களை விட கணிசமாக உள்ளனர். நவோதயா பள்ளிகளில் கிராமப்புற மாணவர்களின் பிரதிநிதித்துவம் 2014-ல் 78% ஆக இருந்தது. 2024-ல் 90% ஆக அதிகரித்துள்ளது.</p>
<p>27% ஓபிசி இடஒதுக்கீடு 2021-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பிரதிநிதித்துவம் நவோதயா பள்ளிகளில் 38.83% மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 29.33% ஐயும் எட்டியுள்ளது. கேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளின் எண்ணிக்கை 1,701 லிருந்து 1,943 பள்ளிகளாக உயர்ந்துள்ளது.</p>
<p>நீட் தேர்வில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐஐடி ஜேஇஇ முதன்மை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றனர். 2,000+ மாணவர்கள் ஐஐடி-க்களில் சேர்க்கை பெற்றனர். சிபிஎஸ்இ பாடத்திட்ட அனுமதி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.</p>
<p>கடந்த 2014இல் 14,974 ஆக இருந்து 2024 இல் 30,415 ஆக அதிகரித்துள்ளது. தொழிற்கல்வி கணிசமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தொழிற்கல்வி வழங்கும் பள்ளிகள் 2014 இல் 960 ஆக இருந்து 2024 இல் 29,342 ஆக உயர்ந்துள்ளன.</p>
<p>திறன் கல்வியில் மாணவர் சேர்க்கை 2014-ல் 58,720 ஆக இருந்தது, 2024-ல் 30.8 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பள்ளி நிர்வாகத்தில் டிஜிட்டல் சீர்திருத்தங்களை அரசு கொண்டு வந்துள்ளது" என்றார். </p>
<p> </p>