<p>நடிகர் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் படத்தில் இடம்பெற்ற “அதான்டா இதான்டா” பாடலுக்காக எழுதப்பட்ட மாற்று வரிகளை கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ளார். </p>
<p>தமிழ் சினிமாவின் கவிப்பேரரசு வைரமுத்து தான் எழுதிய பாட்டுக்கு டம்மியாக எழுதப்பட்ட வரிகள், பாட்டின் வரிகள் உருவான சூழல் போன்றவை அடங்கிய ஆயிரத்தொரு பாடல்கள் என்ற தொகுப்பை உருவாக்கி வருகிறார். அந்த வகையில் 1997ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அருணாசலம் படத்தில் இடம் பெற்ற பாடல் பற்றி எழுதியுள்ளார். இந்த படத்தில் ரம்பா, சௌந்தர்யா, விசு,கிரேஸி மோகன், மனோரமா, செந்தில், ஜனகராஜ், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், ரகுவரன், வி.கே.ராமசாமி, வினு சக்கரவர்த்தி, நிழல்கள் ரவி, வடிவுக்கரசி, அஞ்சு அரவிந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தேவா இப்படத்துக்கு இசையமைத்தார். இந்த படத்தின் கதையை ரஜினி உருவாக்கி சொந்தமாக தயாரித்திருந்தார். </p>
<p>இந்த படத்தில் ரஜினியின் அறிமுகப்பாடலாக 'அதான்டா இதான்டா' அமைந்தது. மிகப்பிரமாண்டமாக இந்த பாடல் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அருணாசலம் படத்தில் இடம்பெற்ற 'அதான்டா இதான்டா' பாடலுக்காக எழுதப்பட்டுப் படத்தில் இடம்பெறாத மாற்றுப் பல்லவியும் சரணங்களும் ஆயிரத்தொரு பாடல்கள் தொகுப்பில் இடம்பெறுகின்றன. இந்த வரிகளை ரசிகர்கள் அதே மெட்டில்பாடிப் பார்க்கலாம், பரவசம் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் டம்மி வரிகளையும் அவர் பகிர்ந்துள்ளார். </p>
<h2><strong>பாடலுக்காக எழுதப்பட்ட வரிகள்</strong></h2>
<h3><strong>பல்லவி</strong></h3>
<p>அன்புள்ள அண்ணன்டா<br />அருணாசலம் நான்தாண்டா<br />சாதிபேதம் இல்லாம<br />சகலருக்கும் சொந்தம்டா<br />ஆண்டவன் நடத்திடுவான்டா<br />அருணாசலம் நடந்திடுவான்டா<br />நான் எந்த நாளும் <br />எளிமையான ஆளடா - அட<br />ஏழை வீட்டு உப்புக் கல்லு நானடா</p>
<h3><strong>சரணம் 1</strong></h3>
<p>எல்லா மனிதனுக்கும் <br />ஓராற்றல் உண்டு – அதை<br />நல்லா வளர்த்துவிடு <br />அடையாளம் கண்டு – அட<br />உதவாத பயலென்று <br />எவனுமில்லை இன்று – சிறு<br />வேப்பம் பூவானாலும் <br />தேனுண்ணும் வண்டு</p>
<p>பாம்புகடிச்சு இங்கே <br />பொழச்சவனும் உண்டு – தன்<br />செருப்புக் கடிச்சு இங்கே <br />செத்தவனும் உண்டு – அட<br />நாளை என்னாகும் என்ற <br />கவலைகளை வென்று – நீ<br />இன்றே சுகம் கண்டு <br />வாழ்வதுதான் நன்று</p>
<p>போதிக்கும் மனிதர்கள் <br />சாதிப்பது இல்லையடா<br />சாதிக்கும் மனிதர்கள் <br />போதிப்பது இல்லையடா</p>
<p>உழைக்கும் மனிதன்<br />அழைக்கும்போது <br />தெய்வம் வருமடா<br />நெற்றி வேர்வை<br />நிலத்தில் சிந்தி<br />வெற்றி வெற்றி கொள்ளடா</p>
<h3><strong>சரணம் 2</strong></h3>
<p>கறையேதும் இல்லாத <br />நிலவெங்கே சொல்லு? – சிறு<br />நுரை கூட இல்லாத<br />நதி எங்கே சொல்லு – அட<br />சதுரத்தில் முட்டையிடும் <br />பறவை எதுசொல்லு – மிகச்<br />சரியாக வாழ்கின்ற மனிதன் <br />யார் சொல்லு?</p>
<p>ரோஜாச் செடியென்றால் <br />அதிலுண்டு முள்ளு – நீ<br />முள்ளோடு மோதாமல் <br />ரோஜாவைக் கிள்ளு – அட<br />அறியாத பிழை என்றால் <br />அதை விட்டுத் தள்ளு – சிறு<br />குறை நீக்கி நிறை கண்டு <br />நெறியோடு நில்லு</p>
<p>இளமையில் உழைப்பவன் <br />முதுமையில் சிரிக்கிறான்<br />இளமையில் படுத்தவன் <br />முதுமையில் அழுகிறான்</p>
<p>விதைக்கு வைத்ததைச் <br />சமைத்து உண்பவன் <br />மிகவும் மூடனடா<br />மழைக்கு முந்தியே <br />கலப்பை செய்பவன் <br />எவனோ அவனே சூரன்டா</p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/budget-cars-under-rs-7-lakh-to-travel-with-family-254063" width="631" height="381" scrolling="no"></iframe></p>