<p>ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது எனக்கு சிவாஜிகணேசன், கருணாநிதியின் பராசக்தி படம்தான் தெரியும். தற்போது வந்துள்ள பராசக்தி பற்றி தெரியாது - மதுரையில் வைகோ பேட்டி.</p>
<div dir="auto"><strong>சமத்துவ நடைபயணம்</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, "சமத்துவ நடைபயணம்" என்ற பெயரில் ஜனவரி 2, 2026 அன்று திருச்சியில் தொடங்கினார். நடை பயணத்தின் நிறைவை எட்டியுள்ள வைக்கோ இன்று மதுரை ஒத்தக்கடை பகுதியில் இருந்து, புறப்பட்டு உத்தங்குடி வரை நடைபயணத்தை மேற்கொண்டார். வைகோவிற்கு மதிமுக தொண்டர்கள் கரகாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம் , புலி ஆட்டம், தப்பாட்டம் பறை இசை மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். கலைஞர்களுடன் வைகோ புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். </div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றிபெறும்</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">இந்தநிலையில், <strong>உத்தங்குடி பகுதியில் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது...,” </strong>கூட்டணி கட்சியில் இருக்கும் பெரும்பாலான தலைவர்கள் நடைபயணத்தில் பங்கேற்று ஆதரவினை தெரிவித்தனர். போதை பொருட்களால் அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும், அதனை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்று, நான் நடைபயணம் அறிவித்த பின்னர்தான், அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகள் அதுபற்றி பேசினார்கள். அதுவரை அவர்கள் அது பற்றி பேசவில்லை. அரசியலுக்கு வருவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. கலை உலகில் இருந்து வருபவர்களுக்கும் உரிமை உண்டு. அவர்களை நான் விமர்சிக்கமாட்டோன். அரசியலுக்கு வந்து எளிதில் சாதித்து விடாலம் என்று மணல்கோட்டை கட்டுகிறார்கள். அது எப்போது வேண்டுமானாலும், சரிந்துவிழும். வருகிற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றிபெறும். தி.மு.க. தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்து, மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராக தமிழகத்தை வழிநடத்துவார்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>பராசக்தி பற்றி தெரியவில்லை</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது. 'சென்சார் போர்டு' எந்த காரணத்திற்காக படத்தை தடுத்து நிறுத்தி உள்ளது என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும். முதலில் தடுத்தாலும், குறுகிய காலத்தில் அதனை நீக்கி கொள்வார்கள். அந்த படம் வெளிவருவதற்கு எந்த பிரச்னையும் இருக்காது. எனக்கு சிவாஜிகணேசன், கருணாநிதியின் பராசக்தி படம்தான் தெரியும். தற்போது வந்துள்ள பராசக்தி பற்றி தெரியாது. தமிழகத்திற்கு வரும், அமித்ஷா தமிழக மக்களுக்கு உபதேசம் செய்கிறார். திராவிட இயக்க பூமியில் அவரது உபதேசம் எடுபடாது. பிரதமர் மோடி தந்திரசாலி. திருக்குறள், புறநானூறு, பாரதியார் பாடல்களை இந்தியில் எழுதி வைத்து கொண்டு வாசிப்பதை வேடிக்கையாக வைத்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தையும், தமிழக மக்களையும் கவர நினைக்கிறார். ஆனால், தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க மறுக்கிறார். தமிழகத்தில், தி.மு.க.வை துடைத்தெறிந்து விடலாம் என நினைக்கிறார்கள். இதைவிட பெரிய அடக்குமுறைகளை எல்லாம் திராவிட முன்னேற்ற கழகம் சந்தித்துள்ளது. தி.மு.க.வை, ஒருபோதும் இந்த பூமியில் இருந்து யாராலும் அகற்றமுடியாது. அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் 8 ஆண்டுகளுக்கு முன்பு சிந்தித்து, திராவிட இயக்கத்தை பாதுகாக்க, தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தோம். இது சித்தாந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. அதில் உறுதியாக இருக்கிறோம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும், எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அதனால், கூட்டணியிலும் பங்கு, ஆட்சியிலும் பங்கு என பேசுகிறார்கள். ஆனால், அந்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை. நாங்கள் அந்த மாதிரியான நிபந்தனைகளை முன்வைக்கவில்லை, வைக்கப்போவதும் இல்லை. இதற்கு பதற்றம் காரணம் இல்லை. மந்திரி சபையில் இடம் வேண்டும் என்று நானோ, எங்கள் கட்சியை சேர்ந்தவர்களோ இதுவரை கேட்டதில்லை. அவ்வாறு கூறுவதற்கு காரணம் உள்ளது. கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கிய பின்னர் எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதை அறிவிப்போம். </div>
<div dir="auto"> </div>
<div dir="auto">இதனை தொடர்ந்து <strong>துரை வைகோ எம்.பி</strong>. கூறுகையில்...,” தலைவர் வைகோ தனது 82 வயதில், இதயமே எந்திரம் மூலம் இயங்கும் நிலையில் இந்த நடைபயணம் அறிவித்தார். இது வேண்டாம் என டாக்டர்கள் உள்ளிட்ட பலரும் அறிவுறுத்தியும் அதனை அவர் ஏற்கவில்லை. நடைபயணத்தின் ஒவ்வொரு வினாடியும் சிரமப்பட்டார். தேர்தல் அரசியலுக்காக சில சமரசங்களை அவர் செய்திருக்கலாம். ஆனால், அவரின் சுயநலத்திற்காக எந்த ஒரு சமரசத்தையும் வைகோ மேற்கொண்டதில்லை. அவரின் தொண்டு, தியாகத்தை கொச்சைப்படுத்தக்கூடாது. கடந்த கால பா.ஜனதா தலைவர்கள் வைகோவை மதிக்கிறார்கள். ஆனால், அண்ணாமலை, நயினார்நாகேந்திரன் போன்றவர்கள் அரசியல் வன்மத்தை வைகோ மீது வைக்கிறார்கள். இது ஏற்புடையதல்ல" என ஆவேசமாக பேசினார்.</div>
<div> </div>