<p>கேரளாவில் தன்னுடன் பேருந்தில் பயணித்த ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்டதாக பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட நபர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. </p>
<p>கோழிக்கோடு கோவிந்தபுரத்தைச் சேர்ந்த தீபக் என்பவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் தற்கொலை செய்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகாரளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டில் ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட தீபக் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தீபக்கின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடைபெற்றது. இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. </p>
<p>அதாவது கோவிந்தபுரத்தைச் சேர்ந்த விற்பனை மேலாளரான தீபக் கடந்த ஜனவரி 15ம் தேதி பணி தொடர்பாக கண்ணூருக்கு சென்றிருந்தார். அப்போது பேருந்தில் தீபக் பயணம் செய்துக் கொண்டிருந்தபோது ஒரு பெண் தன்னிடம் அவர் பாலியல் சீண்டல் செய்வதாக செல்ஃபி வீடியோ ஒன்றை ரகசியமாக பதிவு செய்திருந்தார். இந்த வீடியோவை அப்பெண் சமூக வலைத்தளத்தில் வெளியிட அது காட்டுத்தீயாய் பரவ தொடங்கியது. </p>
<p>நெரிசலான பேருந்தில் பயணித்தபோது அந்த நபர் தனது உடலை பாலியல் நோக்கத்துடன் வேண்டுமென்றே தொட்டதாக அந்தப் பெண் கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்க அந்த வீடியோவை 20 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து எதிர்வினையாற்றினர். முதலில் நான் சாதாரணமாக அதை கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் அவர் வேண்டுமென்றே செய்வது தெரிந்ததும் வீடியோ எடுத்தேன் எனவும் அந்த பெண் கூறியிருந்தார். </p>
<p>இந்த சம்பவம் பையனூரில் நடைபெற்றது. இதுகுறித்து நான் வடகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன். வீடியோவில் பதிவு செய்யப்படுவதை பார்த்ததும் அந்த நபர் பேருந்தில் இறங்கி சென்றார் எனவும் அப்பெண் தெரிவித்தார். இந்த வீடியோவை கண்டு தீபக் மிகவும் வருத்தமடைந்தார்.தான் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துக் கொள்ளவில்லை.தான் தப்பானவன் இல்லை என கூறி புலம்பியுள்ளார். இதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்த தீபக் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே தீபக் மரணம் குறித்து சமூக வலைத்தளத்தில் கடும் விவாதம் கிளம்பியுள்ளது. </p>
<p><strong>(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)</strong></p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/what-happens-if-you-consume-honey-on-an-empty-stomach-for-15-days-details-in-tamil-246977" width="631" height="381" scrolling="no"></iframe></p>