<p>விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை? அரசும் காவல்துறையும் அச்சப்படுகிறதா? என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p>இதுகுறித்து திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:</p>
<p>’’அண்ணா ஹசாரேவைப் பயன்படுத்தி டெல்லியில் ஆட்சிக்கு வந்ததைப்போல, விஜயைப் பயன்படுத்திக்கொள்ள பாஜக முயற்சி செய்கிறது. விஜயைப் பாதுகாக்க பாஜக முயல்கிறது. விஜயின் சாயம் வெளுத்துவிட்டது.</p>
<p>3 நாட்கள் சும்மா இருந்துவிட்டு, ஆர்எஸ்எஸ் தலைமை சொல்லித்தான் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். ஹஸ்கி வாய்ஸில் பேசி வீடியோ வெளியிட்டால் சோகம் என்று மக்கள் நம்புவார்கள் என விஜய் நினைக்கிறாரா? விஜய் போன்ற ஆபத்தான சக்தியிடம் சிக்கினால் தமிழகம் கலவர பூமியாகி விடும்.</p>
<h2><strong>அரசும் காவல்துறையும் அச்சப்படுகிறதா?</strong></h2>
<p>விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை? அரசும் காவல்துறையும் அச்சப்படுகிறதா? திமுகவுக்கும் விஜய்க்கும் ரகசிய டீலிங் என்று சொல்லலாமா? விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யக்கூடாதது என்று அழுத்தம் கொடுத்தது யார்?</p>
<p>புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, ஏன் விஜய் மீதும் ஆதவ் அர்ஜூனா மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை? <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>க்கு மட்டும் பாதுகாப்பு அளிப்பது ஏன்? காவல்துறை பாரபட்சமாகச் செயல்படுவது ஏன்?’’</p>
<p>இவ்வாறு திருமா கேள்வி எழுப்பியுள்ளார்.</p>