<p>அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்<wbr />சந்திரன் துவக்கி வைத்தார்.</p>
<div dir="auto"><strong>வேலை வாய்ப்பு முகாம்</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்<br />நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் துவக்கி வைக்கப்பட்டது. இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் MRF, V.V.V & SONS EDIBLE OIL, ROYAL ENFIELD ACADEMY, APOLLO PHARMACIES, MEENAKSHI MISSION HOSPITAL, LAKSHMI MILLS WORK COIMBATORE, SENTERSOFT TECHNOLOGIES, ELEVATE DIGI TECHNOLOGIES போன்ற 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10000- க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்தனர்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>அமைச்சர் பேச்சு</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்<wbr />சந்திரன் தெரிவித்ததாவது...,” இந்தியாவிலேயே கல்விகள் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஒரு காலத்திலே கல்வியறிவு குறைவாக இருந்த காலத்தில் கடந்த 50 ஆண்டு காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியினை பெற்று, பட்டப்படிப்பு படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு காரணம், நம்முடைய மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். அவரது வழியில் வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடும் வகையில், இது போன்ற, வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறார்கள்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>சிரமங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">படிக்கின்ற காலத்தில் படிப்புச் செலவிற்கு தனது வீட்டை எதிர்பாராமல் சுயமாக படிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. இன்று உலகிலேயே இளைஞர்கள் அதிகமாக உள்ள நாடு நமது இந்தியா தான். இளைஞர்கள் அதிகம் என்றால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. அந்த வேலை வாய்ப்பினை அமைத்து தரும் பொருட்டு இந்த வேலை வாய்ப்பு முகாமினை அமைத்து கொடுத்துள்ளோம். இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்று, தாங்கள் வேலைபார்த்த அனுபவத்தை வைத்து மற்றொரு நிறுவனத்தில் பணிபுரியும் போது முன் அனுபவத்தை வைத்து அதற்கான சிறப்பான ஊதியம் கிடைக்கும். சிரமங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. இன்றைய போட்டிகள் நிறைந்த காலகட்டத்திலே சிரமப்பட்டு தான் முன்னேற முடியும். சிரமப்பட்டு தான் சாதிக்க முடியும். அந்த வகையில் தமிழ்நாட்டின் இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். </div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>நான் முதல்வன் திட்டமானது மாணவர்கள் அரசுத்தேர்வுகள் எழுத வழிவகை செய்கிறது</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">பின்பு, மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்ததாவது...,” இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் நன்றாக படிப்பதற்கு ஏதுவாக நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். நான் முதல்வன் திட்டமானது மாணவர்கள் அரசுத்தேர்வுகள் எழுத வழிவகை செய்கிறது. இது போன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். அதனடிப்படையில் இன்று இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை ஏற்படுத்தியுள்ளார்கள். இதனை பயன்படுத்தி இளைஞர்கள் பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.</div>