<p style="text-align: justify;">டெல்லியில் காற்று மாசானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் பல இடங்களில் காற்று மாசானது மோசமான நிலைக்கு சென்றுள்ளதால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். </p>
<h3 style="text-align: justify;">அதிகரித்து வரும் காற்று மாசு:</h3>
<p style="text-align: justify;">தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கடுமையான அடர் மூடுபனி சூழ்ந்து காணப்பட்டது. குறிப்பாகப் பாண்டவ் நகரில் உள்ள சுவாமிநாராயண் அக்சர்தாம் கோயில் பகுதி முழுவதுமே புகைமூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்தது. சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்குப் பார்வைத்திறன் குறைந்து காணப்பட்டதோடு, பொதுமக்களுக்குக் கண் எரிச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டன.</p>
<h3 style="text-align: justify;">படு மோசமான காற்றின் தரம்:</h3>
<p style="text-align: justify;">டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நேரலைத் தரவுகளின்படி பல இடங்களில் காற்றின் தரக் குறியீடு (AQI) 700-ஐத் தாண்டியுள்ளது. இது 'ஆபத்தானது' எனக் கருதப்படும் பிரிவில் அடங்கும். பிஎம் 10 மற்றும் பிஎம் 2.5 ஆகிய நுண் துகள்களின் அளவு இயல்பான வரம்பை விடப் பல மடங்கு அதிகமாகப் பதிவாகியுள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்படி, நகரின் 37 கண்காணிப்பு நிலையங்களில் 32 நிலையங்கள் 'கடுமையான' நிலையைப் பதிவு செய்துள்ளன. இதில் 19 இடங்களில் மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக ஆனந்த் விகார், அசோக் விகார், பவானா மற்றும் ரோகினி ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனந்த் விகாரில் காற்றின் தரம் 631 ஆகவும், அசோக் விகாரில் 763 ஆகவும் பதிவாகியுள்ளது. அதேபோல் பவானாவில் 701, வஜிர்பூரில் 743 எனப் பல பகுதிகளில் காற்று சுவாசிக்கத் தகுதியற்றதாக மாறியுள்ளது. நகரின் மிகக் குறைந்த அளவாக அயன்நகரில் 356 எனப் பதிவாகியிருந்தாலும், இதுவும் பாதுகாப்பான அளவை விட மிக அதிகமாகவே உள்ளது.</p>
<h3 style="text-align: justify;">இரவு நேரங்களில் உச்சகட்ட பாதிப்பு</h3>
<p style="text-align: justify;">இரவு நேரங்களில் இந்தப் பாதிப்பு இன்னும் பயங்கரமானதாக மாறுகிறது. நள்ளிரவு 1 மணி அளவில் ஆனந்த் விகார் பகுதியில் பிஎம் 2.5 அளவு ஒரு கன மீட்டருக்கு 890 மைக்ரோகிராம் எட்டியது. இது தேசியத் தரத்தை விட 15 மடங்கு அதிகமாகவும், உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு வரம்பை விட 59 மடங்கு அதிகமாகவும் உள்ளது. நேரு நகரில் சனிக்கிழமை இரவு இந்த அளவு 952 மைக்ரோகிராமாக உயர்ந்தது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.</p>
<h3 style="text-align: justify;">காற்றுமாசுக்கான காரணம் என்ன?</h3>
<p style="text-align: justify;">இந்தக் கடுமையான காற்று மாசுக்கு நகருக்குள் நிலவும் புகை மற்றும் கடுமையான வானிலையே முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. காற்றில் வேகம் இல்லாததால் மாசுக்கள் ஓரிடத்தில் தேங்கி நிற்கின்றன. குளிர்கால வெப்பநிலை மாற்றங்கள் நச்சுக்காற்றைத் தரை மட்டத்திலேயே தடுத்து நிறுத்துவதால், மக்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.</p>
<h3 style="text-align: justify;">மருத்துவர்கள் அறிவுரை</h3>
<p style="text-align: justify;">இது போன்ற சூழலில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இதயம் சார்ந்த நோய் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பலத்த காற்று வீசும் வரை இந்த அபாயகரமான சூழல் தொடரும் என்பதால் அவசரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தற்போதைய தேவையாக உள்ளது.</p>
<p style="text-align: justify;"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/which-royal-enfield-bullet-bike-gives-highest-mileage-247208" width="631" height="381" scrolling="no"></iframe></p>