<p style="text-align: left;"><strong>Red Button Robotic COP - அறிமுகம்</strong></p>
<p style="text-align: left;">சென்னையில் பெண்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பிற்காக காவல் துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் , பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சென்று வரும் பொது இடங்கள், சில குற்ற நிகழ்வு இடங்களிலும் அவசர காவல் உதவிக்காக , பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக மேற்கண்ட நவீன சாதனத்தின் சிறப்பு செயல்பாடுகளை காவல் அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் ' ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்" ( Red Button Robotic COP ) என்ற பாதுகாப்பு சாதனம் அறிமுகப்படுத்தப்படுகிறது.</p>
<p style="text-align: left;"><strong>துல்லிய கண்காணிப்பு பதிவுகள்</strong></p>
<p style="text-align: left;">'ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்" பாதுகாப்பு சாதனத்தில் 24 மணி நேரமும் 360° பல மீட்டர் தூர துல்லிய கண்காணிப்பு பதிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் நேரடி காணொளி காட்சி பதிவு , குரல் தொடர்பு பதிவுகள் , காவல் துறையும் ஆபத்தில் உள்ள பொதுமக்கள் உரையாடும் வசதி , அவசர அழைப்பு எச்சரிக்கை ஒலி வசதி, உயர் தர நவீன வீடியோ கேமரா மற்றும் மைக்ரோபோன் வசதி, ஜி.பி.எஸ் வசதி , மக்கள் எந்த இடத்தில் இருந்தாலும் ஒரு அழைப்பிற்கு உதவிடும் விரைவான நடவடிக்கைகள், உயிர் காக்கும் செயல்பாடுகளுடன் தகுந்த திறன் பயிற்சியுடன் கூடிய காவல் துறையினர் மூலம் கண்காணிப்பு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p>
<p style="text-align: left;"><strong>எப்படி செயல்படுகிறது ? </strong></p>
<p style="text-align: left;">இந்த சாதனத்தில் உள்ள ஒரு சிவப்பு நிற பொத்தானை ஆபத்தில் இருக்கும் நபரோ அல்லது அவருக்காக மற்றொரு நபரோ அழுத்துவதன் மூலம் உடனடியாக காவல்துறைக்கு அழைப்பும், அருகில் உள்ளவர்களுக்கு ஒலி எழுப்பி எச்சரிக்கை சப்தம் ஏற்படுத்தி உதவிடவும் , ஆபத்தில் உள்ளவர்க்கு வீடியோ கால் வசதி மூலம் நேரடியாக காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உதவிக் கோரவும் , ரோந்து காவல் வாகனங்கள் வீடியோ கால் அழைப்பு மூலம் நிகழ்வுகளை கண்காணித்து உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து வந்தடைந்து உரிய நடவடிக்கை எடுத்திடவும், கேமரா பதிவுகள் மூலம் நிகழ்வுகளை கொண்டு புலன் விசாரணையை தொடங்கி நடவடிக்கை எடுத்திடவும் பெரிதும் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: left;">'ரெட் பட்டன்-ரோபோட்டிக்காப் சாதனத்தில் 24 x 7 இண்டர்நெட் வசதிகள் வழங்கப்பட்டு புதிய தொழில் நுட்பம் மற்றும் அப்டேட் வசதிகள் மூலம் பொது மக்களின் பிரச்சனைகளை உரிய நேரத்தில் கண்டறிந்து , உடனடி நடவடிக்கை எடுத்திட பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன் , மேலும் எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் குற்றம் செய்பவர்களுக்கு எச்சரிக்கை மணியாக திகழும் , இச்சாதனம் பெரிதும் காவல் துறையோடு இணைந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நண்பனாக திகழ இருக்கிறது.</p>
<p style="text-align: left;">இந்த பாதுகாப்பு சாதனம் மூலம் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் தங்களது சமூக பொறுப்புடன் அவசர காலங்களில் விரைவான நடவடிக்கை எடுத்து உயிர் காக்கும் உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.</p>
<p style="text-align: left;"><strong>எந்தெந்த இடங்களில் , ரெட் பட்டன் - ரோபோட்டிக்காப்</strong></p>
<p style="text-align: left;">சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் , 12 காவல் மாவட்டங்கள் கொண்ட 4 காவல் மண்டலங்களில் தலா 50 இடங்களில் மேற்கண்ட காவல் 'ரெட் பட்டன்- ரோபோட்டிக்காப்" சாதனத்தை பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அமைத்திட வேண்டிய இடங்கள் குறித்து சரக அதிகாரிகள் மூலம் கள ஆய்வு நடத்தி விபரங்கள் பெறப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: left;">மேற்கண்ட நவீன பாதுகாப்பு சாதனம் மூலம் பொதுமக்கள் பயனடையும் வகையில் சென்னையில் இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், IT நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வந்து செல்லும் இடங்களில் கண்காணிப்புக்காக வரும் ஜூன் மாதம் முதல் நிறுவப்பட உள்ளது.</p>
<p style="text-align: left;">வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்ப சென்னை பெருநகர காவல்துறை , மக்களின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தி தனியார் நிறுவனம் மற்றும் பொதுநலன் கருதும் நிறுவனங்கள் உதவியுடன் காவல் "ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்" என்ற பாதுகாப்பு சாதனத்தை நிறுவி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வழிவகை செய்யப்படுகிறது.</p>