<p>தமிழ்நாட்டில் அமைய இருந்த மசாகான் டாக் கப்பல் கட்டும் திட்டம் ஆந்திராவுக்கு மாறியது ஏன்? தமிழக தொழில் துறைக்கு இது பெரிய இழப்பு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார். </p>
<h2><strong>இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:</strong></h2>
<p>’’மசாகான் டாக் கப்பல் கட்டும் திட்டம் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய மிகப்பெரிய தொழில் முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கும். கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்ப்பு, எஃகு தயாரிப்பு, இயந்திர உற்பத்தி, மின்சாதனங்கள், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துணைத் தொழில்கள் வளர்ச்சியடைந்திருக்கும்.</p>
<p>குறிப்பாக கடலோர மாவட்டங்களை மையமாகக் கொண்டு புதிய தொழில் வளாகங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியுடன் கூடிய உயர்தர வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கும். மாநில அரசுக்கு வரி வருவாய் அதிகரித்திருக்கும். துறைமுக வளர்ச்சிக்கும், ஏற்றுமதி வளர்ச்சிக்கும் இந்தத் திட்டம் பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கும்.</p>
<h2><strong> அரசின் செயல்திறன் குறித்து கேள்வி</strong></h2>
<p>ஆனால் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் தற்போது ஆந்திரப் பிரதேசத்திற்கு மாறியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் தமிழ்நாட்டு மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்து வந்த நிலையில், இவ்வளவு பெரிய திட்டம் வேறு மாநிலத்திற்கு சென்றிருப்பது அரசின் செயல்திறன் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.</p>
<p>இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் நிலைநிறுத்துவதற்காக மாநில அரசு என்ன முயற்சிகளை மேற்கொண்டது? மத்திய அரசுடன் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது? திட்டத்திற்கு தேவையான நிலம், உள்கட்டமைப்பு மற்றும் சலுகைகள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என்பதற்கான விளக்கத்தை தமிழக அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.</p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/6gCjAhC1BUk?si=PECIw0KXpUmZ5Nif" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>என்ன செய்திருக்க வேண்டும்?</strong></h2>
<p>குறிப்பாக தொழில்துறை அமைச்சர், அரசு செயலாளர்கள் இந்த விவகாரத்தில் போதிய அக்கறை செலுத்தினார்களா? தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய இந்த முக்கிய முதலீட்டை தக்கவைத்துக் கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டனவா? என்ற சந்தேகங்கள் இயல்பாக எழுகின்றன. திட்டம் வேறு மாநிலத்திற்கு சென்ற பின்னர் வருத்தம் தெரிவிப்பதை விட, ஆரம்ப கட்டத்திலேயே தீவிர முயற்சிகளை மேற்கொண்டு திட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்திருக்க வேண்டும்.</p>
<p>எனவே, மசாகான் டாக் திட்டம் தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு மாறியதற்கான முழுமையான காரணங்களை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். மேலும், இனி இதுபோன்ற பெரிய முதலீட்டுத் திட்டங்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறாத வகையில் தொழில் முதலீட்டு கொள்கைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளை மறுபரிசீலனை செய்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p>
<h2><strong>அரசு பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்</strong></h2>
<p>தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியும், இளைஞர்களின் வேலைவாய்ப்பும் பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் முதன்மை பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/will-stopping-drinking-coffee-cause-these-changes-in-your-body-263366" width="631" height="381" scrolling="no"></iframe></p>