<p>உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் பெண்களும் குழந்தைகளுமே அதிக எண்ணிக்கையில் உயிரிழந்திருக்கின்றனர்.</p>
<p>100க்கும் மேற்பட்டவர்களின் உயிரை பறித்த இந்த சம்பவத்திற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. போலே பாபா என்ற சாமியாரின் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு வந்த மக்கள், அவரது காலடி மண்ணை எடுக்க முற்பட்டுபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p>
<p>இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 80,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.</p>
<p>இவ்வளவு பெரிய கூட்டத்தை சமாளிக்க போதுமான ஏற்பாடுகளை ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்பட இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p> </p>