<p>ராஜஸ்தானில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 90 வயது மூதாட்டியை கட்டிலுடன் தூக்கிச் சென்று அவர் அணிந்திருந்த வெள்ளி நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தங்கம், வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் நகைகள் வாங்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் தங்கம் விலை உயர்ந்த நிலையில் அனைவரது கவனமும் வெள்ளி பக்கம் திரும்பியது. தற்போது வெள்ளி ஆபரணமும் அளவுக்கதிகமாக உயர்ந்து வருவதால் பலரும் கவலையடைந்துள்ளனர். நகைகள் மீதான மதிப்பு உயர்ந்துள்ளதால் ஆங்காங்கே கொள்ளை சம்பவமும் அரங்கேறி வருகிறது. </p>
<p>அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா மாவட்டத்தின் சவாய் மாதோபூரில் ஒரு மூதாட்டி அணிந்திருந்த வெள்ளி நகைகள் திருடப்பட்டுள்ளது. அங்கு அர்வாட் பகுதியில் உள்ள கோதியா கிராமத்தில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி இரவு நாதி தேவி மாலி என்பவரது வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்துள்ளனர். உள்ளே வந்தவர்கள் மற்ற நபர்களை ஒரு அறைக்குள் போட்டு பூட்டினர். அப்போது வீட்டின் வாசலில் நாதி தேவியின் வயதான மாமியார் சோட்டி தேவி ஒரு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார்.</p>
<p>திருட வந்தவர்கள் சோட்டி தேவி கனமான வெள்ளி நகைகளை அணிந்திருப்பதைக் கண்டனர். உடனடியாக வாயை மூடி கட்டிலுடன் சேர்த்து தூக்கி செல்லப்பட்ட சோட்டி தேவி அருகிலுள்ள வயல் வெளியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். இதற்கிடையில் வீட்டின் அறையில் பூட்டப்பட்டிருந்த குடும்ப உறுப்பினர்கள் எழுந்து பார்த்தபோது அறை வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். </p>
<p>உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுக்க அவர்கள் வந்து பூட்டை உடைத்து நாதி தேவி மாலியின் குடும்பத்தினரை மீட்டனர். ஆனால் வீட்டின் வெளிப்பக்கத்தில் படுத்திருந்த சோட்டி தேவியைக் காணவில்லை என்பதால் உடனடியாக அவரது குடும்பத்தினர் கிராம மக்களுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அருகிலிருந்த வயலில் சோட்டி தேவி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். ஆனால் அவர் அணிந்திருந்த வெள்ளி நகைகளை முழுவதுமாக திருட வந்தவர்களால் கொள்ளையடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். </p>
<p>முன்னதாக பிப்ரவரி 3ம் தேதி சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள கொடை கிராமத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஒரு பெண்ணின் கால்களை கூர்மையான ஆயுதத்தால் துண்டித்து அவர் அணிந்திருந்த வெள்ளி கொலுசுகளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் அந்த பெண் உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட பெண் தனது ஆடுகளை மேய்க்க வயலுக்குச் சென்றபோது தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/what-is-the-best-time-to-eat-apple-249132" width="631" height="381" scrolling="no"></iframe></p>