<p style="text-align: left;"><strong>விழுப்புரம்:</strong> முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு 1337 மெ.டன் காம்ப்ளெக்ஸ் கொச்சின் இரயில் நிலையத்தில் இருந்து உரமூட்டைகள் வருகை தந்தது.</p>
<p style="text-align: left;">விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் கொச்சின் இரயில் நிலையத்தில் இருந்து வந்தடைந்த FACT உர நிறுவனத்தின் 1337 மெ.டன் காம்ப்ளெக்ஸ் உர மூட்டைகளை வேளாண்மை உதவி இயக்குநர் எம்.என்.விஜயகுமார் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் சாகுபடிக்கான நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும் உளுந்து, நிலக்கடலை, கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். </p>
<p style="text-align: left;">தற்போது பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 5760 மெ.டன், டி.ஏ.பி. 1903 மெ.டன், பொட்டாஷ் 1705 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 7417 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 1704 மெ.டன் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.</p>
<p style="text-align: left;">இம்மாவட்டத்திற்கு தேவையான உர விநியோகத் திட்ட இலக்கீட்டின்படி உர நிறுவனங்களிடமிருந்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பெறப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது. அந்த வகையில் FACT நிறுவனத்தில் இருந்து சரக்கு ரயிலில் உர மூட்டைகள் வந்தன. மொத்தம் 1337 மெ.டன் காம்ப்ளெக்ஸ் உரமூட்டைகள் வந்தது. </p>
<p style="text-align: left;">இதில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 263.2 மெ.டன், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 635 மெ.டன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 259 மெ.டன் , காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 120 மெ.டன் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 60 மெ.டன் உர மூட்டைகள் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் அந்தந்த குடோன்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.</p>
<p style="text-align: left;">நடப்பு குறுவை பருவத்திற்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.</p>