<p>முகூர்த்தம், பக்ரீத், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.</p>
<h2>வார இறுதியில் முகூர்த்த நாள்கள்:</h2>
<p>இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "05/06/2025 (வியாழக்கிழமை) 06/06/2025 (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம் 07/06/2025 (சனிக்கிழமை), மற்றும் 08/06/2025 (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>இதனை கருத்தில் கொண்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டுள்ளன.</p>
<h2><strong>கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதாவரத்திலிருந்து சிறப்பு பேருந்துகள்:</strong></h2>
<p>சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 06/06/2025 (வெள்ளிக் கிழமை) அன்று 520 பேருந்துகளும் 07/06/2025 (சனிக் கிழமை) 550 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 06/06/2025 வெள்ளிக்கிழமை அன்று 100 பேருந்துகளும், 07/06/2025 சனிக் கிழமை அன்று 90 பேருத்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>மாதாவரத்திலிருந்து 06/06/2025 மற்றும் 07/06/2025 ஆகிய நாட்களில் தலா 24 பேருந்துகளும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<h2><strong>வெளியூர் போறீங்களா?</strong></h2>
<p>மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 14,413 பயணிகளும் சனிக்கிழமை அன்று 5,990 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 15,680 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.</p>
<h2><strong>இந்த வீக் கவலையே இல்ல</strong></h2>
<p>இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு <strong>www.tnstc.in</strong> மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p>
<p>இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.</p>
<p> </p>