<p>மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் வேடமிட்டு மதுரைக்கு புறப்பட்டார் சுந்தராஜபெருமாள்.<br /><br /><strong>சித்திரைத திருவிழா 2026</strong><br /><br />தென் திருப்பதி என்றழைக்கப்படும் மதுரை மாவட்டம் அழகர்கோயில் பகுதியில் உள்ள அழகர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கள்ளழகர் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதனையடுத்து நேற்றும் நேற்று முன்தினமும் 2 நாள் நிகழ்வாக கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தில் மாலை நேரத்தில் தோளுக்கினியான் கோலத்தில் எழுந்தருளினர். 3ஆவது நாள் நிகழ்வாக இன்று காலை திருக்கல்யாண மண்டபத்தில் தோளுக்கினியான் கோலத்தில் எழுந்தருளினார். இதனையடுத்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரைக்கு புறப்பாடான சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் மாலை கொண்டப்பநாயக்கர் மண்டகப்படியில் எழுந்தருளிய பின்னர் தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் மதுரை நோக்கி புறப்பாடாகினார்.<br /><br /><strong>கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பாடாகினார்</strong></p>
<p>கோயிலில் இருந்து புறப்பாடாகிய கள்ளழகர் கோயில் வெளிப்பிரகாரத்தில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயிலுக்கு எழுந்தருளிய பின்னர் கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பாடாகினார். அப்போது மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷத்தோடு கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தியபடி சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பொய்கைகரைபட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி ஜமின்தார் மண்டகப்பட்டியில் நள்ளிரவில் எழுந்தருளுகிறார். இதனை தொடர்ந்து சுந்தராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் இருந்து அதிகாலையில் தங்கப்பல்லக்கில் கள்ளர் கோலத்தில் புறப்பாடாகிய பின்னர் காலை 5 மணிக்கு மதுரை மாநகர் பகுதியான கடச்சனேந்தல் பகுதிக்கு வந்தடைந்த பின்னர் காலை 6 மணியளவில் மூன்றுமாவடி பகுதியில் கள்ளழகரை வரவேற்கும் வகையில எதிர்சேவை நடைபெறும்,</p>
<p><strong>தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்.</strong> <br /><br />இதனை தொடர்ந்து புதூர், ரிசர்வ்லைன், அவுட்போஸ்ட் பகுதியிலும், இரவு 7 மணிக்கு மேல் அம்பலகார மண்டகப்படியில் எழுந்தருளிய பின்னர் இரவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்காடஜலபதி பெருமாள் கோயிலில் கள்ளழகர் திருமஞ்சனமாகி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். பின்னர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்த பின்னர் தல்லாகுளம் பகுதியில் உள்ள ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளி தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதையடுத்து தல்லாகுளம் பகுதியில் உள்ள கருப்பணசுவாமி கோயிலில் இருந்து புறப்பாடாகி பின்னர் வைகையாற்றில் அதிகாலை 5.35 மணி முதல் 5.55 மணிக்குள் வைகை ஆற்றிற்குள் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளவுள்ளார். கள்ளழகர் இன்று இரவு புறப்பாடு ஆகும் இடம் தொடங்கி எதிர்சேவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள 456 க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளுவார். அப்போது கள்ளழகர் முன்பாக ஏராளமான பக்தர்கள் கருப்பணசாமி வேடமிட்டு, தீப்பந்தம் ஏந்தி தங்களது நேர்த்திகடன்களை செலுத்துவர். மேலும் ஏராளமான பக்தர்கள் தங்க பல்லக்கில் மதுரை மாநகருக்கு வரும் கள்ளழகரை எதிர்சேவை மூலமாக வரவேற்கும் விதமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிப்பர்.</p>
<p><strong>காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்</strong></p>
<p>கள்ளழகர் புறப்பாட்டை முன்னிட்டு மதுரை மாவட்டம் அழகர் கோவில் பகுதியில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின் போது காலணிகளை தூக்கி எறிவது போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கள்ளழகர் எதிர்சேவை மற்றும் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு தீர்த்தவாரி ஆகிய நிகழ்வுகளில் பிரஷர் பம்புகளை பயன்படுத்தி தண்ணீர் தெளிக்க மாவட்ட நிர்வாகமும் காவல்துறை தரப்பிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்திருக்கும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து 500 கன அடி நீரானது திறக்கப்பட்டுள்ள நிலையில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைகையாற்று பகுதிக்கு தண்ணீர் வந்தடைந்துள்ளது.</p>