<p>ஒடிசா மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு ரயிலில் கஞ்சா கடத்திச் சென்ற இளைஞரை கோவை போத்தனூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாநகரில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>
<p><strong>4 கிலோ கஞ்சா பறிமுதல்</strong></p>
<p>கோவை, போத்தனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போத்தனூர் ரயில் நிலையத்தில் போலீசார் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் பெரிய பைகளுடன் நின்று இருந்த ஒருவரைப் பிடித்துச் சோதனை செய்தனர்.</p>
<p> அந்தச் சோதனையில், 4 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதை அடுத்து, அந்த நபரை கைது செய்த போலீசார், விசாரணை செய்தனர் . விசாரணையில் பிடிபட்ட நபர் ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமநாத் அர்ஜில் என்பது தெரியவந்தது. இவர் ஒடிசாவில் இருந்து சட்ட விரோதமாகக் கஞ்சாவை கொண்டு வந்து அதனை ரயில் மூலம் கேரளாவுக்குக் கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாகப் போத்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.</p>