<p>குஜராத் மாநிலம் சூரத் நகரில் தனது மனைவி கொடுமைப்படுத்துவதால் கருணைக்கொலை செய்து விடுமாறு ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p>
<p>சூரத்தைச் சேர்ந்த கிரீட் படேல் என்பவர் தான் இத்தகைய மனுவை அளித்துள்ளார். தனது மனைவியின் துன்புறுத்தல் குறித்த தனது புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் விரக்தியின் உச்சிக்குத் தள்ளப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புலம்பி தீர்த்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இனியும் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் தனிப்பட்ட மன உளைச்சல் காரணமாக, தனது உயிரை மாய்த்துக்கொள்ள அனுமதி கோருவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். </p>
<p>கிரீட் படேல் அளித்த தகவலின்படி, அவரது திருமணம் 2024ம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. தனது மனைவி, மாமியார் மற்றும் பிற உறவினர்கள் தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். பணம் தர மறுத்ததால் தன்னைத் துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனக்கு எதிராகத் தொடரப்பட்ட ஜீவனாம்சம் மற்றும் குடும்ப வன்முறை வழக்குகள் அழுத்தம் கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் கீரிட் படேல் தெரிவித்துள்ளார்.</p>
<p><iframe title="Congress Gayathri | ”ஓட்டு வாங்க யோக்கியதை இல்ல! உணர்வே கிடையாதா” ஆத்திரத்தில் காங். காயத்ரி" src="https://www.youtube.com/embed/_FrrDcpUVJA" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>கிரீட் படேல் முன்வைத்த மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளில் ஒன்று. அவரது முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த மகன் தொடர்பானதாக உள்ளது. எனது தற்போதைய மனைவி அக்குழந்தைக்குத் தீங்கு விளைவிக்க முயன்றார். இதனால் நான் காவல்துறையை அணுகிய போதிலும் அந்தப் புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்ததாகவும் கிரீட் படேல் கூறியுள்ளார். </p>
<p>எனக்கும், என் மனைவிக்கும் இது மூன்றாவது திருமணமாகும். என் மனைவி முந்தைய கணவர்களிடமிருந்தும் பணம் பறித்துள்ளார். அவளை கொள்ளைக்கார மணமகள் என சொல்லலாம் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் கிரீட் படேல் தெரிவித்துள்ளார். பெண்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்களைத் தனது மனைவி தவறாக பயன்படுத்துகிறார். </p>
<p>குடும்பச் சண்டைகளுக்கான வாக்குவாதங்களை தொடங்கி விட்டு பின்னர் காவல்துறை அல்லது பெண்கள் பாதுகாப்பு உதவி எண்களைத் தொடர்பு கொண்டு புகாரளிக்கிறார். அதன் விளைவாக தனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா நடந்ததா என்பதை கூட சரிபார்க்கவில்லை. அதுமட்டுமல்லாமல் குடும்பச் சண்டைகளை எதிர்கொள்ளும் ஆண்களுக்கு சட்டப் பாதுகாப்பு இல்லாதது குறித்து படேல் தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தனது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் அடுத்தக்கட்ட முடிவை எடுப்பேன் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/health-tips-what-happens-if-you-eat-curry-leaves-for-breakfast-260928" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p> </p>