<p>புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது</p>
<p>புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகத் தேர்வு கட்டுப்பாட்டாளர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், </p>
<p>புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒரு வருடம் மற்றும் இரண்டு ஆண்டுகள் கொண்ட NCVT/SCVT பயிற்சிப் பிரிவுகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h2>முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை:</h2>
<p>இப்பயிற்சிகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் மே 22, 2026 முதல் ஜூன் 22, 2026 வரை அதிகாரப்பூர்வ இணையதளங்களான https://www.centacpuducherry.in/ அல்லது https://labour.py.gov.in/ ஆகியவற்றின் மூலம் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். சென்டாக் (CENTAC) இணையதளத்தில் பதிவு செய்வதற்கு எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால், மாணவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று, அங்கிருக்கும் உதவி மையங்கள் மூலமாக எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக விண்ணப்பித்துக் கொள்ள தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p>
<h2>கல்வித் தகுதி</h2>
<p>எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்கேற்ற தொழிற்பயிற்சி பிரிவுகளிலும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்குரிய பிரிவுகளிலும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். உடனடி வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் இந்த ஐடிஐ படிப்புகளில் சேருவதற்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதால், தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பித்துப் பயனடையலாம்.</p>
<h2>மாதந்தோறும் 1,000 உதவித்தொகை</h2>
<p>மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரி அரசு பல்வேறு சிறப்பான சலுகைகளையும், நிதியுதவிகளையும் அறிவித்துள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சியின் போது மாதந்தோறும் 1,000 உதவித்தொகை (Stipend) வழங்கப்படும். இது தவிர, தகுதித் தேர்வின் அடிப்படையில் ஒவ்வொரு பயிற்சிப் பிரிவிலும் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குக் கூடுதலாக மேலும் 1,000 ஊக்கத்தொகை அளிக்கப்படும். மேலும், பயிற்சியில் சேரும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் மதிய உணவு, பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் ஆகியவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.</p>
<h2>நவீன தொழிற்பயிற்சி</h2>
<p>தற்போது புதுச்சேரி மாநிலத்தின் மேட்டுப்பாளையம், வம்பாகீரப்பாளையம், வில்லியனூர், பாகூர், நெட்டப்பாக்கம் ஆகிய இடங்களிலும், அதே போல் காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளிலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களில் கணினி, எலக்ட்ரீசியன், சிவில், ஏசி மெக்கானிக், மோட்டார் வாகன மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், ஒயர்மேன், தையற்கலை, அழகுகலை, வெல்டர், டர்னர், ஃபிட்டர், உணவு மற்றும் விருந்தோம்பல் போன்ற பாரம்பரியப் பிரிவுகள் மட்டுமின்றி, தற்காலத்திற்குத் தேவையான ட்ரோன் டெக்னீஷியன், சோலார் டெக்னீஷியன், மின்சார வாகன (EV) மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழிற்பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.</p>
<h2>100 சதவிகிதம் வேலைவாய்ப்பு</h2>
<p>இங்கு தொழிற்பயிற்சி பெற்றுத் தேர்ச்சி அடையும் அனைத்து மாணவர்களுக்கும் 100 சதவிகிதம் வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிகள் மற்றும் பாடப்பிரிவுகள் குறித்த முழுமையான விவரங்கள் அடங்கிய கையேட்டினை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் வழியாகவே மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விபரங்களைப் பெற விரும்பும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 8055786775 என்ற உதவி மைய அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். </p>