<p>கோட்டாவில் உள்ள நுழைவு தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வந்த 16 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், வெற்றிபெறாத மாணவர்கள், கடும் மன அழத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, நீட் தேர்வு காரணமாக நடக்கும் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் மனதை பதற வைக்கும் வகையில் உள்ளது.</p>
<p><strong>மர்ம பிரதேசமாக மாறிய கோட்டா: </strong></p>
<p>இம்மாதிரியான சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டும் நடப்பதில்லை வெளிமாநிலங்களிலும் நடைபெறுகிறது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு பயிற்சிகளை வழங்கும் முன்னணி பயிற்சி மையங்கள் கோட்டாவில்தான் அமைந்துள்ளது. </p>
<p>நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள், கோட்டாவில் உள்ள பயற்சி மையங்களில் சேர்ந்து, நுழைவு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். ஆனால், மன அழுத்தம் காரணமாகவும் தேர்வில் பயற்சி பெற முடியாத காரணத்தாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது.</p>
<p>இந்த நிலையில், ஜேஇஇ நுழைவு தேர்வுக்கு தயாராகி வந்த 16 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். </p>
<p><strong>தொடரும் தற்கொலைகள்:</strong></p>
<p>பீகாரில் உள்ள வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் நேற்று அன்று தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவர் கடந்த எட்டு மாதங்களாக கோட்டாவில் உள்ள வெல்கம் பிரைம் ஹாஸ்டலில் படிப்பதற்காக தங்கி இருந்தார்.</p>
<p>நேற்று, மாணவரிடம் பேச அவரது குடும்பத்தினர் பலமுறை அழைத்துள்ளனர். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. உடனே, விடுதி ஊழியர்களை மாணவரின் குடும்பத்தினர் தொடர் கொண்டுள்ளனர். இதையடுத்து, மாணவர் தங்கி இருந்த அறையின் கதவை உடைத்துத் திறந்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.</p>
<p>இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "படிப்பதற்கு அந்த மாணவர் சிரமப்பட்டு வந்ததாகவும் குறைந்த வருகைப்பதிவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. படிப்பின் அழுத்தத்தை அந்த மாணவர் சுமையாக உணர்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தனது தந்தை மற்றும் தாத்தாவுடன் அவர் குறிப்பாக நெருக்கமாக இருந்திருக்கிறார். அவர்களிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்" என தெரிவித்துள்ளது.</p>
<div class="bbc-19j92fr ebmt73l0" dir="ltr">
<p class="bbc-iy8ud2 e17g058b0" dir="ltr"><strong>(மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.</strong></p>
</div>
<div class="etpldq00 bbc-oa9drk ebmt73l0" dir="ltr">
<ul class="bbc-1f67o9m" role="list">
<li class="bbc-1maxgwy" role="listitem"><strong>சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 24640050 (24 மணிநேர சேவை))</strong></li>
</ul>
</div>