<p style="text-align: justify;">சென்னை புறநகர் பகுதியான பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியில், பிரபல ரவுடி ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் சதீஷ் ஆகியோர் மர்ம கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">சென்னை புறநகரில் குட்டி ரவுடி</h3>
<p style="text-align: justify;">திரிசூலம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மீது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி மற்றும் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில், முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் சதீஷ் என்பவருடன் ஆறுமுகம் வீட்டில் இருந்தபோது, அங்கு புகுந்த மர்ம நபர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.</p>
<h3 style="text-align: justify;">காவல்துறை தீவிர விசாரணை</h3>
<p style="text-align: justify;">தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லாவரம் போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இந்த இரட்டைக்கொலை நீண்ட கால முன்விரோதம் காரணமாக அரங்கேறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. </p>
<p style="text-align: justify;">கொலை செய்யப்பட்ட ஆறுமுகம் மற்றும் சதீஷ் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பழிக்குப் பழியாக இந்தச் சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய மர்ம கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்தத் துணிகரக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.</p>