<h3><strong>மயான பூமி - பல ஆண்டுகள் கோரிக்கை</strong></h3>
<p>சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மயான பூமி வேண்டும் என பல ஆண்டுகளாக அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.</p>
<h3><strong>சட்டமன்றத்தில் பேசிய எம்.எல்.ஏ , ஆர்.டி சேகர் </strong></h3>
<p>இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இது குறித்து பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி சேகருக்கு கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் இது குறித்து பேசி இருந்தார்.</p>
<h3><strong>தமிழக அரசு வாக்குறுதி</strong></h3>
<p>கொடுங்கையூர் குப்பை கிடங்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் , இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மதத்தினருக்கு அவரது மத வழக்கப்படி உடல்களை அடக்கம் செய்ய மயான பூமி அமைத்து தரப்படும் என தமிழக அரசு சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.</p>
<h3><strong>ரூ.11.80 கோடி மதிப்பில் பணிகள் நிறைவு</strong></h3>
<p>கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு மயான பூமி அமைக்கும் பணிகள் சுமார் 11.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு , பணிகள் அனைத்தும் நிறைவடைந்து கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு மயான பூமியை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.</p>
<h3><strong>இந்து மதத்தினருக்கும் 3 ஏக்கர் நிலம் தயார்</strong></h3>
<p>இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.‌ கிறிஸ்தவர்களுக்கு 3 ஏக்கர் நிலம் இஸ்லாமியர்களுக்கு மூன்று ஏக்கர் நிலம் தற்போது தயார் செய்யப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.</p>
<p>மேலும் இதனை ஒட்டியே இந்து மதத்திற்கு மூன்று ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த பணிகள் முடிவுற்ற பிறகு அவர்களுக்கு இந்த இடம் அளிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p>
<p>இந்த நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் , மாமன்ற உறுப்பினர்கள் டில்லிபாபு , ஷர்மிளா காந்தி , உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>