<p>திருவண்ணாமலை மாவட்டத்தில் நண்பர்களை பார்க்க செல்வதை தடுத்த மனைவியால் விரக்தியடைந்த கணவன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p>
<p>திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் பகுதியில் உள்ள சவேரியார்பாளையத்தில் சீனிவாசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நகராட்சி துப்புரவு பணியாளராக வேலைப் பார்த்து வருகிறார். இவருடைய மகனான 22 வயதாகும் மோகன் ராஜ், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் திருமணம் நடந்த நிலையில் புதுமண தம்பதியினர் இருவரும் வந்தவாசி புதுத் தெருவில் இருக்கும் கார்வண்ணன் என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தனர். </p>
<p>இதனிடையே மோகன் ராஜ் அடிக்கடி தனது நண்பர்களை காண செல்வதும், அப்போது நீண்ட நேரம் மனைவி தனிமையில் இருப்பதுமாக இருந்துள்ளது. இதனால் கணவர் மீது மனைவி அதிருப்தியில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தனது நண்பர்களைப் பார்க்க செல்வதாக மனைவியிடம் மோகன் ராஜ் கூறியுள்ளார். இதனை கண்டித்த அவர் மனைவி வெளியே போக வேண்டாம் என தடுத்துள்ளார். </p>
<p>இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தியடைந்த மோகன்ராஜ் வீட்டில் இருந்த ஒரு அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார். வெகு நேரமாகியும் அவர் வெளியே வராத நிலையில் சந்தேகமடைந்த மனைவி அறையின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது அங்கு மோகன் ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதனால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். </p>
<p>உடனடியாக மோகன்ராஜ் தற்கொலை குறித்து அவரின் தந்தை சீனிவாசன் வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உடனடியாக காவல் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான குழுவினர் சென்று சம்பவ இடத்தில் இருந்து மோகன் ராஜ் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ச்சியாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களை பார்க்க செல்ல வேண்டாம் என மனைவி தடுத்ததால் இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p><strong>(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)</strong></p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/what-happens-if-you-consume-honey-on-an-empty-stomach-for-15-days-details-in-tamil-246977" width="631" height="381" scrolling="no"></iframe></p>