<p><strong>திருப்பத்தூர்:</strong> ஜோலார்பேட்டை திமுக வேட்பாளர் கவிதா, சொந்த ஊரில் வாக்கு சேகரிக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு அழுதது அங்கு இருப்போரை நெகிழச் செய்தது.</p>
<p>தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதை தொடர்ந்து, பிரச்சாரம் இன்னும் சூடுபிடித்துள்ளது. மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள் அவர்களை கவரும் விதமாக பலவிதமான செயல்களை செய்கின்றனர். துணி துவைப்பது, ஆட்டோ ஓட்டுவது, டீ போடுவது, போண்டா, பஜ்ஜி சுடுவது போன்ற செயல்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கின்றனர். இப்படியெல்லாம் இருக்க ஒரு பெண் வேட்பாளர் தனது சொந்த ஊரில் வாக்குகளை சேகரிக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.</p>
<p>ஜோலார்பேட்டை திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கவிதா தண்டபாணி தனது சொந்த ஊரான மாக்கனூர் பகுதியில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது நான் பிறந்து வளர்ந்த இந்த ஊரில் உள்ள நீங்கள் எல்லோரும் என்னுடைய நெருங்கிய உறவினர்கள், எனக்கு வாக்களியுங்கள் என்று உங்களிடம் எப்படி வாக்கு சேகரிப்பது என தெரியவில்லை என உணர்ச்சிவசப்பட்டு அழுதார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரிடம் அழ வேண்டாம், நாங்கள் நிச்சயம் உங்களுக்கு வாக்கு அளிக்கிறோம் என ஆறுதல் கூறினர் </p>
<p>மேலும், 2016 இல் இதே தொகுதியில் போட்டியிட்ட நான் 15 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றேன். எனவே இந்த முறை எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டார் </p>
<p>சொந்த ஊரில் வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி அழுத வேட்பாளரால் அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/gk/how-many-countries-are-in-nato-256102" width="631" height="381" scrolling="no"></iframe></p>