<p>தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.</p>
<p>அமெரிக்காவில் இருந்து ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று (14/12/2024) தமிழ்நாடு திரும்பிய சத்குருவிற்கு, கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோக மையம் வரை வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து நின்று பிரம்மாண்டமான வரவேற்பினை வழங்கினர். </p>
<p><strong>தமிழகம் திரும்பிய சத்குரு:</strong></p>
<p>அமெரிக்காவில் இருக்கும் ஈஷா யோக மையத்திற்கு கடந்த மே மாதம் சென்ற சத்குரு ஏழு மாதங்களுக்குப் பிறகு இன்று தமிழ்நாடு திரும்பினார். அவரை வரவேற்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் குவிந்தனர். </p>
<p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/14/7976f08a8139b8e35c07448496d087aa1734190941536729_original.jpg" width="716" height="478" /></p>
<p>சத்குரு மாலை 6 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு மட்டுமே திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆரத்தி காட்டி வரவேற்றனர். </p>
<p>இதைத் தொடர்ந்து கோவை விமான நிலையத்தில இருந்து ஈஷா யோக மையம் வரை பல்வேறு இடங்களில் மக்கள் திரளாக அணிவகுத்து நின்று மலர்களை தூவியும், விளக்குகளை ஏந்தியும், மேள தாளத்துடன் சத்குருவை வரவேற்றனர். குறிப்பாக அவிநாசி சாலையில் உள்ள நாகர்கோவில் ஆர்ய பவன் உணவகத்தில் திரண்டு இருந்த மக்கள் அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.</p>
<p><strong> 10,000-க்கும் அதிகமானோர் திரண்டனர்:</strong></p>
<p>ரேஸ் கோர்ஸ் சாலையில் வள்ளி கும்மி நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காளம்பாளையம், மாதம்பட்டி, பூலுவப்பட்டி, ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளூர் கிராம மக்கள் சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பினை வழங்கினர். </p>
<p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/14/1fd1d59d38e5e81cf6a2a5bebd77c4251734190970998729_original.jpg" width="754" height="504" /></p>
<p>ஈஷா யோக மையத்தின் நுழைவாயிலான மலைவாசலில், ஈஷாவை சுற்றியுள்ள பழங்குடி மக்கள் திரண்டு அவர்களின் பாரம்பரிய இசை, நடனம் மற்றும் வான வேடிக்கைகளுடன் கொண்டாட்டமாக சத்குருவை வரவேற்றனர். </p>
<p>மேலும் ஆதியோகியில் 10,000-க்கும் அதிகமானோர் திரண்டு இருந்தனர். அவர்கள் சத்குருவை வரவேற்கும் பொருட்டு ஆதியோகி மற்றும் ஈஷா யோக மைய வளாகத்தில் 1,00,008 அகல் விளக்குகளை ஏற்றி இருந்தனர். ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் தேவாரம் பாடினர். மேலும் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரமவாசிகள் பாரம்பரிய இசை மற்றும் நடனங்களுடன் சத்குருவை வரவேற்றனர். ஆதியோகி முன்பு திரண்டு இருந்த மக்கள் முன்பு சத்குரு உரையாற்றினார்.</p>