<p style="text-align: justify;">தஞ்சாவூர்: தஞ்சையில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2.14 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.</p>
<p style="text-align: justify;">தமிழக சட்டசபை தேர்தல் தேதியானது கடந்த 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதனால் அன்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. இதையடுத்து 15ம் தேதி மாலை முதல் தஞ்சை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் தொடர்ந்து 24 மணிநேரமும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். </p>
<p style="text-align: justify;">ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நான்கு சக்கர வாகனத்தில் வந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த பூண்டு வியாபரி மோகன்ராஜ் என்பவர் வாகனத்தை தடுத்து சோதனை செய்தனர்.</p>
<p style="text-align: justify;">இதில் அவர் உரிய ஆவணமின்றி ரூ.54 ஆயிரம் வைத்து இருந்தது தெரியவந்தது. அப்போது அவர் அதிகாரிகளிடம் மார்க்கெட்டுக்கு பூண்டு வாங்க செல்வதாக தெரிவித்துள்ளார். அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அந்த ரூ.54 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.</p>
<p style="text-align: justify;">இதேபோல் தஞ்சை பட்டுக்கோட்டை பைப்பாஸ் சாலையில் ராகினி தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த பாரூக் என்பவர் காய்கறி வாங்குவதற்காக திருச்சி மார்க்கெட்டுக்கு எடுத்து சென்றதாகவும், உரிய ஆவணம் இல்லாததால் அதனை பறிமுதல் செய்ததவும் தெரிய வந்தது. </p>
<p style="text-align: justify;">இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், இதுவரை தஞ்சை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.34 லட்சத்து 53 ஆயிரத்து 486 உரிய ஆவணங்கள் இல்லாததால் 24 நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் 4 பேர்கள் மட்டும் உரிய ஆவணம் செலுத்தி பணத்தை மீட்டு சென்றுள்ளனர். இந்த பணத்திற்கு உரிய ஆவணங்களை காண்பித்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.</p>
<p style="text-align: justify;">இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சுரேந்தர் பைக்கை சோதனையிட்டனர். இதில் ஆவணங்கள் இல்லாமல் ரூ.60 ஆயிரத்து 800 ரூபாய் எடுத்துச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு தாசில்தார் சிவக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.</p>