<p style="text-align: justify;">தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவியதால் பெட்ரோல் பங்குகளில் நேற்றிரவு குவிந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. </p>
<p style="text-align: justify;">2026ஆம் ஆண்டு பிப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் – ஈரான் இடையே பெரிய அளவிலான போர் நிலை உருவாகியுள்ளது. இதில் அமெரிக்காவும் இஸ்ரேலுடன் இணைந்து ஈரானில் பல முக்கிய ராணுவ மற்றும் அணு தொடர்பான இலக்குகளை தாக்கியதாக தகவல்கள் வெளியாகின.</p>
<p style="text-align: justify;">28 பிப்ரவரி 2026 அன்று Operation Lion’s Roar என்ற பெயரில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் ராணுவ தளங்கள் மற்றும் அணு தொடர்பான இடங்களை தாக்கின. இதைத் தொடர்ந்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்தது. இந்த மோதல் தற்போது மத்திய கிழக்கின் பல பகுதிகளுக்கு பரவி உள்ளது:</p>
<p style="text-align: justify;">மேலும் இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. வளைகுடா நாடுகளில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் இந்தியாவில் சிலிண்டர் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு உருவாகும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவியதால் தஞ்சாவூரில் பல்வேறு பெட்ரோல் பங்குகளில் நேற்று இரவு முதல் குவிந்து வரும் பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இன்று முதல் பெட்ரோல் விலை உயரப்போவதாகவும் பரவிய வதந்தியால் வாகனங்களில் பெட்ரோலை பிடித்துக் கொண்டு இரவு நேரத்திலும் பெட்ரோல் பங்கில் நீண்ட நேரமாக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். முக்கியமாக தஞ்சாவூரில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். </p>
<p style="text-align: justify;">இது தஞ்சை நகர் பகுதியில் மட்டுமின்றி கிராமப்புறங்களுக்கும் பரவியது. இதனால் இன்று காலையிலேயே பெட்ரோல் பங்கிற்கு படையெடுத்து வாகனங்களிலும் கேன்களிலும் பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர். நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதால் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க - ஈரான் போர் காரணமாக இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் - மேலும் அதன் விலையும் உயரும் என வதந்தி பரவியதால்தான் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோலை நிரப்பி வருகின்றனர். இதைப்போல் இன்று காலை முதல் விளார் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிலும் குவிந்த பொதுமக்கள் தங்களது வாகனங்களிலும் கேன்களிலும் பெட்ரோல் டீசலை நிரப்பிச் செல்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">இந்த போர் காரணமாக உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல நாடுகள் அவசர ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றன.</p>