<p>ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் அரசுக்கு ஆதரவாக 45 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.</p>
<p>81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 27 சட்டப்பேரவை உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சிக்கு 17 சட்டப்பேரவை உறுப்பினர்களும் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு ஒரு சட்டப்பேரவை உறுப்பினரும் உள்ளனர்.</p>
<p>பாஜக தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 30 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர், மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டதால் ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் மொத்தம் பலம் 76ஆக குறைந்தது. </p>
<p>இதன் காரணமாக, பெரும்பான்மைக்கு 38 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் போதுமானது. ஜார்க்கண்ட் சபாநாயகர் ரவீந்திர நாத் மஹ்தோ நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஒரு மணி நேரம் ஒதுக்கினார். நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு ஹேமந்த் சோரன் தனது அமைச்சரவையை விரிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p> </p>