<p style="text-align: left;"><strong>தஞ்சாவூர்:</strong> பழனி மலைக்கு கூடுதலாக ஒரு ரோப் கார் சேவை பணிகள் விரைவில் துவங்கும். சுவாமிமலை கோயிலில் லிப்ட் அமைக்கும் பணிகள் தாமதம் ஆகிறது. இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.</p>
<p style="text-align: left;">தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கற்பக ரட்சாம்பிகை கோயிலுக்கு நேற்று இரவு வருகை புரிந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:</p>
<p style="text-align: left;">தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருகாவூரில் அமைந்துள்ள கற்பகரட்சாம்பிகை அம்மன் ஆலயத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளி ரதம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக இந்த கோவிலில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 408 கிலோ வெள்ளியை, வெள்ளி ரதம் செய்யும் ஸ்தபதியிடம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் நேற்று இரவு ஒப்படைத்தனர். இதற்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:</p>
<p style="text-align: left;">பொதுமக்கள் வசதிக்காக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் மின் தூக்கி (லிப்ட்) பணிகள் எதிர்வரும் ஜூலை மாதம் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதன் பணிகள் சற்று காலதாமதம் ஆகிறது. கால தாமதத்திற்கான காரணம் குறித்து நாளை (இன்று) சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம்.</p>
<p style="text-align: left;">மருதமலைக்கு ஒரு மின் தூக்கி (லிப்ட்) உருவாகி வருகிறது. மேலும் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் லிப்ட் சேவையில் ஒரு கட்ட பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் தான் சோளிங்கர் நரசிங்க பெருமாள் கோயிலில் ரோப் கார் சேவைகள் தொடங்கப்பட்டது.</p>
<p style="text-align: left;">திருக்கழுகுன்றம், திருப்பரங்குன்றம் ஆகிய கோவில்களுக்கு புதிய ரோப் கார் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும். பக்தர்கள் வசதிக்காக பழனி மலையில் மேலும் ஒரு ரோப் கார் சேவை புதிதாக அமைக்கப்பட உள்ளது. நாளை (இன்று) நாகை மாவட்டம் திருப்புகழூரில் 3000 வது கோவில் குடமுழுக்கு விழா நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>
<p style="text-align: left;">தஞ்சை மாவட்டம் கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள சுவாமிமலை கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழும் திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை தலத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமானை சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என்று அழைக்கப்படுகிறார். அதனால்தான் இந்த ஊரின் பெயரும் சுவாமிமலை என்றே கூறப்படுகிறது.</p>
<p style="text-align: left;">படைப்புத் தொழில் செய்து வந்ததால் பிரம்மனுக்கு ஆணவம் ஏற்பட்டது. இதையறிந்த முருகன் பிரம்மனிடம், ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா?” என்று கேட்டார். ஆனால் பிரம்மனுக்கு பதில் தெரியாமல் திகைத்தார். இதனால் அவரைத் தலையில் குட்டி சிறையில் அடைத்தார் முருகன். சிவபெருமானே நேரில் வந்து கேட்டுக் கொண்டதற்குப் பின்னர்தான், பிரம்மனை விடுதலை செய்தார். அப்போது சிவபெருமான் முருகனிடம், பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?” என்று கேட்க நன்றாகத் தெரியுமே என்று முருகன் கூற, அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?” என்றார் ஈசன்.</p>
<p style="text-align: left;">“உரிய முறையில் கேட்டால் சொல்வேன்” என்று பதில் கூறினார் முருகன். அதன்படி சிவபெருமான் இத்தலத்தில், முருகனுக்கு சீடனாக தரையில் பவ்யமாக அமர்ந்தபடி, முருகனிடம் பிரணவத்திற்காக பொருளை உபதேசமாக பெற்றார். அன்று முதல் முருகன், ‘சுவாமிநாதன்’ என்றும், ‘பரமகுரு’ என்றும், ‘தகப்பன் சுவாமி’ என்றும் போற்றப்பட்டார். இக்கோவிலில் சுவாமிநாதன் கம்பீரமாக, நான்கரை அடி உயரமுள்ள திருவுருவத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த சுவாமிமலை முருகன் கோயிலுக்கு வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>