<p>சத்தீஸ்கர் மாநிலத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதைக் காணலாம். </p>
<p>சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தின் ஷிவ்ரிநாராயண் காவல் நிலையப் பகுதியான தார்தேயில் உள்ள ஒரு வீட்டின் முன் நின்ற வேப்ப மரத்தில் இரு உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. அந்த வீட்டில் வசித்த கிருஷ்ணா படேல் மற்றும் அவரது மனைவி ரமா பாய் ஆகியோர் தற்கொலை செய்துக் கொண்டது பொழுது விடிந்ததும் தான் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தது. இந்த செய்தி அம்மாவட்டம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. </p>
<p>உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையின்போது கிருஷ்ணா படேல் மற்றும் அவரது மனைவி ரமா பாய் ஆகிய இருவரும் 4 பக்க தற்கொலை கடிதம் ஒன்றையும், ஒரு வீடியோவையும் விட்டுச் சென்றது தெரிய வந்தது. </p>
<p>அதனை கைப்பற்றி ஆய்வு செய்ததில் இந்த தற்கொலைக்கான காரணம் தெரிய வந்தது. அதாவது இந்த தம்பதியினரின் ஒரே மகனான ஆதித்யா படேல் என்ற 21 வயது இளைஞன் கடந்த 2024 ஆம் ஆண்டு மஸ்தூரி காவல் நிலையப் பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்தில் இறந்தான். கொத்தனாராக பணியாற்றி வரும் கிருஷ்ணா மற்றும் இல்லத்தரசியான ரமா பாய்க்கு அவர்களின் மகன் ஆதித்யா தான் உலகமாக இருந்துள்ளான். </p>
<p>இப்படியான நிலையில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் தம்பதியினர் தவித்து வந்துள்ளனர். அந்த தற்கொலை கடிதத்தில் எங்கள் வாழ்க்கையின் அடித்தளம், எங்கள் உலகம்... ஒரு கீழ்ப்படிதலுள்ள மகன் மற்றும் ஒரு நண்பன் ஆதித்யா தான் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த விபத்துக்குப் பின் சிரிப்பால் நிரம்பியிருந்த எங்கள் வீடு அமைதியாகி விட்டது. ஆதித்யா கோயில் வேலை மற்றும் யாக பூஜை தொடர்பான பணிக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த பூசாரியுடன் சென்றான். </p>
<p>முதலில் அந்த வேலைக்கு செல்ல என் மகன் தயங்கிய நிலையில், நான் தான் இது கடவுளின் வேலை என சொல்லி அனுப்பி வைத்தேன். அது மிகப்பெரிய தவறு. அதுதான் ஆதித்யா எங்களை விட்டு செல்ல காரணமாக அமைந்தது. நீண்ட துன்பங்களுக்குப் பிறகு, என் மனம் இப்போது அமைதியடைந்துள்ளது. கடவுளுடன் இணைவதே எனது விதி. நாங்கள் இருவரும் உணர்வுபூர்வமாகவும் விருப்பத்துடனும் எங்களை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கிறோம்.இதற்கு யாரும் காரணம் அல்ல. தயவுசெய்து மகிழ்ச்சியான இதயத்துடன் எங்களை வழியனுப்புங்கள். எங்களுக்காக துக்கப்பட வேண்டாம். நாங்கள் இந்த உலகத்தை விட்டு முழு அமைதியுடனும், விருப்பமின்றி, மகிழ்ச்சியான மனநிலையுடனும் வெளியேறுகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>
<p>கடந்த ஒரு வருடமாக, அந்தத் தம்பதியினர் தங்களிடம் பெரிதாக பேசவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் முகத்தில் சிரிப்பை காண்பதே அரிதாக இருந்தது. இப்போது இந்த சோக முடிவை எடுத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். </p>
<p><strong>(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)</strong></p>
<p><strong><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/easy-home-remedies-for-bad-breath-details-in-tamil-249767" width="631" height="381" scrolling="no"></iframe></strong></p>