<p style="text-align: justify;">கோவை, ஆர்.எஸ்.புரம் பட்டு நூல்காரர் சந்து தெருவை சேர்ந்தவர் பஷீர். இவருடைய மகன் அபுதாகிர் பாஷா. இவர் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மேலும் அவர் மாற்று ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். கடந்த 29 ஆம் தேதி மாலை வெளியே சென்ற அபுதாகிர் பாஷா வீடு திரும்பவில்லை. அவரது செல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து புகாரின் பேரில் ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.</p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/04/bf35bef6badfd4ac11965a256c6ef3611780582826155193_original.JPG" /></p>
<p style="text-align: justify;">இந்நிலையில் சிரியன் சர்ச் சாலையில் சாக்கடையில் அபுதாகிர் பாஷாவின் உடல் சாக்கு முட்டையில் கட்டப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது உடல் எரிக்கப்பட்டு, வயிற்று பகுதியில் கத்தியால் குத்திய காயமும் இருந்தது. இதனால் அபுதாஹீர் பாஷாவை கொலை செய்து எரித்தது யார் ? என்பது கண்டுபிடிக்க துணை காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">அவர்கள் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது அபுதாகிர் பாஷா தனது வீட்டு அருகே உள்ள மற்றொரு வீட்டுக்கு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனால் அந்த வீட்டில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நர்பத் சிங் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். உடனே அவர் கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனே அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து அபுதாகிர் பாஷாவின் தங்க சங்கிலியை மீட்டனர். அவர் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில் கூறும் போது,</p>
<p style="text-align: justify;">கோவையில் 2017 ஆம் ஆண்டு முதல் தங்கி செல்போன் மற்றும் உதிரிபாகம் விற்பனை செய்து வருவதாகவும், 2023 ஆம் ஆண்டு அபுதாஹீர் பாஷாவுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், தொழில் நெருக்கடி காரணமாக அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறியவர், அதை திரும்பி செலுத்த முடியாத நிலையில் அப்தாகீர் பாஷா பணத்தை திரும்பி கேட்டு தகராறு செய்து மிரட்டி உள்ளதாகவும், இதனால் முன் விரோதம் ஏற்பட்டதாக தெரிவித்து உள்ளார்.</p>
<p style="text-align: justify;">மேலும் கடந்த 29 ஆம் தேதி இரவு சுமார் 9 மணி அளவில் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு உள்ளார். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே வீட்டில் இருந்த கயிறால் கழுத்தை இறுக்கி அபுதாகிர் பாஷாவை கொலை செய்ததாகவும், அவரது கழுத்தில் இருந்து தங்கச் சங்கிலியை கழற்றி எடுத்துக் கொண்டு, பின்னர் உடலை சாக்குப்பையில் கட்டி வீட்டில் மறைத்து வைத்து இருந்ததாகவும், செல்போன்களை பொன்ராஜபுரம் பகுதியில் வீசி ஆதாரங்களையும் மறைக்க முயன்றதாகவும் தெரிவித்தார்.</p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/04/1b60b846af31805a304f5f0150264c091780582847052193_original.JPG" /></p>
<p style="text-align: justify;">பின்னர் மறுநாள் மாலையில் அப்தாகிர் பாஷா உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று சிரியன் சர்ச் அருகே சாக்கடையில் கால்வாயில் வீசியதாகவும், அந்த சாக்கு மூட்டையில் அவரது கடையின் பெயர் இருந்ததால், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாகவும், பின்னரும் மோதிரத்தை அடகு வைத்து ரூபாய் 68,000 பெற்றதாகவும், கடனை திரும்பி கேட்டு மிரட்டியதால் தீர்த்து கட்டியதாகவும் அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார். பின்னர் நர்பத் சிங் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.</p>