<p>ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவாக சந்தோஷ் நாராயணன், தீ பாடிய “ஏன்சியண்ட் சீட்” பாடல் வெளியிடப்பட்டுள்ளது. </p>
<p>கோவை மாவட்ட ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், கான்ஷியஸ் பிளானட் இசைத் தொகுப்பின் முதல் பாடலை சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகி தீ, திவா சாவேஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் வொண்டாகர்ள் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். “ஏன்சியண்ட் சீட்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்பாடல் நேற்று (மார்ச் 6) வெளியிடப்பட்டது.</p>
<p>விவசாய நிலங்களில் மண் வளத்திற்கு ஆதாரமாக விளங்கும் அங்கக கரிமத்தை அதிகரிக்க வேண்டிய அவசியத்தையும், எதிர்கால சந்ததியினருக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் வலியுறுத்தும் வகையில் ‘கான்ஷியஸ் பிளானட் இசைத் தொகுப்பு’ உருவாக்கப்பட்டு வருகிறது. </p>
<p>இசை எனும் வலிமையான ஊடகத்தின் வாயிலாக, மண்ணைப் பாதுகாப்பதன் அவசியத்தை உலகிற்கு எடுத்துரைப்பதே இந்த இசைத்தொகுப்பின் முக்கிய நோக்கமாகும். “ஏன்சியண்ட் சீட்” பாடல், பாடகி தீ-யின் உணர்வுப்பூர்வமான குரலும், சந்தோஷ் நாராயணனின் தனித்துவமான இசை அமைப்பும் இணைந்து மண்ணுக்கும் மனிதனுக்குமான ஆழமான பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. </p>
<p><iframe title="Dhee, Tiwa Savage, Santhosh Narayanan, WondaGurl - Ancient Seed (Official Lyric Video)" src="https://www.youtube.com/embed/MJA9B0qEURs" width="805" height="453" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>இந்தப் பாடல் குறித்து பாடகி தீ கூறுகையில், "மண் என்பது வாழ்வின் அடிப்படை. அங்குதான் வாழ்வு தொடங்குகிறது, முடிகிறது, மீண்டும் உயிர்த்தெழுகிறது. மண்ணைப் பாதுகாப்பது என்பது உயிரையே பாதுகாப்பதற்குச் சமம். நாம் செய்யும் அனைத்தும் இறுதியில் மண், சூரியன் மற்றும் நீர் ஆகியவற்றிலிருந்தே உருவாகின்றன. உலகளாவிய அளவில் அழிந்து வரும் மண் வளம் தொடர்பான நெருக்கடியான சூழல் குறித்து, மண் காப்போம் இயக்கம் மூலம் சத்குரு ஏற்படுத்திய விழிப்புணர்வுக்கு பிறகே எனக்குப் புரிந்தது. </p>
<p>ஆகையால் என்னால் முடிந்த எந்த வகையிலாவது இந்த இயக்கத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேன். இது வெறும் இசை அல்லது பாடலோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்ய ஆசைப்படுகிறேன். ஆனால் இப்படி ஒரு பாடலோடு இதனைத் தொடங்குவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது," என்று தெரிவித்தார்.</p>
<p>உலகளவில் அழிந்து வரும் மண்ணின் வளத்தை மீட்டெடுக்க 2022-ஆம் ஆண்டு சத்குருவால் ‘மண் காப்போம்’ இயக்கம் தொடங்கப்பட்டது. ஒரு வளமான மண்ணில் குறைந்தபட்சம் 3% முதல் 6% வரை அங்கக கரிமம் இருக்க வேண்டும். ஆனால் உலகின் பல பகுதிகளில் இது 1%-க்கும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக இந்தியாவின் 62% மண்ணில் 0.5%-க்கும் குறைவான அங்கக கரிமமே உள்ளது. இது உணவுப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.</p>
<p>இந்த இக்கட்டான சூழலை உலகத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல சத்குரு 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள இந்த முதல் பாடல், அனைத்து முன்னணி இசைத் தளங்களிலும் உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.</p>