<p>பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் விஜய் என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்ல வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். </p>
<p>தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுள்ளது. முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். புதிய அரசு கடந்த மே 10ம் தேதி பதவியேற்றது. இதனிடையே கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டான்.</p>
<p>இதனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை சரியாகும் என நம்பிக்கையுடன் காத்திருந்த மக்கள் கவலையடைந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசை கடுமையாக சாடி வருகிறது. முதலமைச்சர் விஜய் இன்று காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் எதிக்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>க்கு எதிராக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். </p>
<p><iframe title="TK Prabhu inspection | ”எல்லாம் கரெக்ட்டா போகுதா” நள்ளிரவு 1 மணிக்கு ஆய்வு! அமைச்சர் பிரபு அதிரடி" src="https://www.youtube.com/embed/-IAEULd_V-Y" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>அதில், “தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி. கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.</p>
<p>சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது. முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.</p>
<p>மாண்புமிகு முதல்வர் அவர்களே, இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை? தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.</p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.<br /><br />மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.<br /><br />கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த…</p>
— Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) <a href="https://twitter.com/Udhaystalin/status/2058808768578945113?ref_src=twsrc%5Etfw">May 25, 2026</a></blockquote>
<p>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<p>நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்” என உதயநிதி தெரிவித்துள்ளார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/simple-tips-to-get-rid-cockroaches-a-nuisance-at-home-261173" width="631" height="381" scrolling="no"></iframe></p>