<p style="text-align: justify;">சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று மதியம் 2:25 மணியளவில் கோவை நோக்கிப் புறப்பட்ட இண்டிகோ விமானம், தரையிறங்கும் முயற்சியின் போது llllதொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் வானில் பறந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">கோவை விமான நிலையத்தில் பரபரப்பு </h3>
<p style="text-align: justify;">இன்று மதியம் 3:25 மணியளவில் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அந்த விமானம், ஓடுதளத்தில் தரையிறங்குவதற்காகத் தனது சக்கரங்களை விரித்தது. அப்போது, எதிர்பாராத விதமாக விமானத்தின் பின் சக்கரங்கள் மட்டும் சரியாகத் தரையைத் தொட்டன. ஆனால், முன்பக்க சக்கரங்கள் சரியாகச் செயல்படாததாலோ அல்லது ஓடுபாதையில் ஏற்பட்ட தடங்கலாலோ, விமானி உடனடியாக விமானத்தைக் கட்டுப்படுத்தி மீண்டும் வானத்தை நோக்கி உயர்த்திப் பறக்கச் செய்தார்.</p>
<p style="text-align: justify;">இந்த திடீர் மாற்றத்தால், விமானத்தில் பயணம் செய்த பயணிகள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கடும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தனர். ஓடுபாதையில் சில மீட்டர் தூரம் பயணித்து, மீண்டும் விமானம் மேலெழுந்த அந்தப் பதற்றமான நிமிடங்கள் பயணிகளுக்குப் பெரும் சோதனையாக அமைந்தன.</p>
<h3 style="text-align: justify;">வான்பரப்பிலேயே வட்டமடித்த விமானம் </h3>
<p style="text-align: justify;">இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த விமானம் சுமார் 45 நிமிடங்கள் கோவையின் வான்பரப்பிலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது. விமானி மற்றும் கட்டுப்பாட்டு அறையினர் தீவிரமாகச் சோதனைகளை மேற்கொண்ட பிறகு, நிலைமை சீரானதை உறுதி செய்து, மீண்டும் விமானம் பத்திரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.</p>
<h3 style="text-align: justify;">பயணிகள் கருத்து என்ன ?</h3>
<p style="text-align: justify;">இதுகுறித்து விமானத்தில் பயணித்த ஒரு பயணி கூறுகையில், "விமானம் சாதாரணமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. திடீரென பின் சக்கரங்கள் மட்டும் பலமாகத் தரையைத் தொட்டன. அடுத்த சில நொடிகளிலேயே விமானம் மீண்டும் வானத்தை நோக்கி வேகமாகப் பறக்கத் தொடங்கியதால் நாங்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானோம். பல நிமிடங்கள் வானில் வட்டமடித்தபடி இருந்ததால், விமானத்திற்கு ஏதோ பெரிய பாதிப்பு என நினைத்து அஞ்சினோம்" என்று தனது அச்சத்தைப் பகிர்ந்து கொண்டார்.</p>
<p style="text-align: justify;">தரையிறங்கும் முயற்சியின் போது விமானம் மீண்டும் வான்நோக்கிப் பறந்த இந்தச் சம்பவம் கோவை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தத் தொழில்நுட்பக் கோளாறு குறித்து விமான நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>