<h3><strong>கணவன் - மனைவி இடையே தகராறு</strong></h3>
<p>திருவள்ளூர் மாவட்டம் ஜவகர்நகர் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் ( வயது 30) இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருவள்ளூர் மாவட்டம் , பெருமாள் செட்டி தெருவை சேர்ந்த லாவண்யா ( வயது 24 ) என்பவருடன் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி தற்போது 10 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.</p>
<p>இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த கருத்து வேறுபாடு காரணமாக லாவண்யா, பெருமாள் செட்டி தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் கடந்த இரண்டு வாரமாக தங்கியுள்ளார். இந்நிலையில் 26 ம் தேதி லாவண்யாவிடம் பேசுவதற்காக கணவர் சுனில் குமார் அவரின் தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.</p>
<h3><strong>தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி</strong></h3>
<p>சுனில் குமார் அவரது மனைவியை வீட்டிற்கு வந்து குடும்பம் நடத்து மாறும் குழந்தையை தன்னிடம் கொடுக்குமாறும் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் லாவண்யா கையில் வைத்திருந்த குழந்தையை பிடுங்கிக் கொண்டு செல்ல முயன்றுள்ளார் சுனில் குமார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே மிகப் பெரிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் லாவண்யா கதவை சாத்திக் கொண்டு சென்றுள்ளார்.</p>
<p>கணவன் வீட்டு வாசலில் இருக்கும் போதே லாவண்யா மின்விசிறியில் புடவையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நடக்கும் போது லாவண்யாவின் தாயார் வெளியில் சென்றுள்ளார். மீண்டும் அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.</p>
<p>இதனையடுத்து, லாவண்யாவின் தாயார் அமுதா இது குறித்து திருவள்ளூர் நகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, பத்து மாத ஆண் கை குழந்தை உள்ள நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது</p>