<p>சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் ( வயது 42 ) இவர் சென்னை வடக்கு நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.</p>
<p><strong>தாக்கல் செய்த அந்த மனுவில் ; </strong></p>
<p>சென்னையில் இருந்து கோவைக்கு கடந்த மே, 22 - ல் , ஆன்லைன் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்தேன். பேருந்தில் மொபைல் சார்ஜிங் , புத்தகம் வாசிக்க மின் விளக்கு , குடிநீர் பாட்டில் , கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளன என " க்ரிஷ் பஸ் டிராவல்ஸ் " நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.</p>
<p>இந்த வசதிகளுக்கும் சேர்த்து கட்டணமாக 1,182 ரூபாய் வசூலித்தனர். ஆனால், பயணத்தின் போது கழிப்பறையை சிறுநீர் கழிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். மலம் கழிக்க பயன்படுத்தக் கூடாது. மீறினால் 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றனர்.</p>
<p>இது தொடர்பாக, எச்சரிக்கை வாசகத்தை பேருந்தில் ஒட்டியிருந்தனர். எனவே, நியாயமற்ற வர்த்தகம் , பயணிகளை ஏமாற்றும் நோக்கில் ஈடுபட்ட தனியார் பேருந்து நிறுவனம் , 50,000 ரூபாய் இழப்பீடும் டிக்கெட் கட்டணத்தையும் திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>
<p><strong>இந்த மனுவை விசாரித்த ஆணைய தலைவர் கண்ணன் டி. கோபிநாத் , உறுப்பினர்கள் கவிதா வி.ராம மூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் ; </strong></p>
<p>பேருந்து நிறுவனம் தரப்பில் யாரும் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை. இந்த புகாரில் உள்ள பிரச்சனை பொது முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே தவறான விளம்பரம் வெளியிட்டு , இது போல சுரண்டல் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது.</p>
<p>விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளபடி , எந்த ஒரு நிபந்தனைகளும் இன்றி , பயணியர் அத்தகைய வசதிகளை பயன்படுத்த பேருந்து நிர்வாகம் உடனே அனுமதிக்க வேண்டும். இல்லையேல் அத்தகைய தவறான விளம்பரத்தை உடனே இணைய தளத்தில் இருந்து நீக்க வேண்டும்.</p>
<p>பாதிக்கப்பட்ட பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 10,000 ரூபாய் இழப்பீடாக " க்ரிஷ் பஸ் டிராவல்ஸ் " நிறுவனம் வழங்க வேண்டும். தவறினால் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.</p>