<p data-start="43" data-end="175">கோவை மாவட்டத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை கோடை வெப்பத்தை தணித்து, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.</p>
<p data-start="177" data-end="467">கடந்த சில வாரங்களாக கோவை மாவட்டத்தில் கடும் கோடை வெயில் நிலவி வந்தது. பல இடங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை கடந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் இன்று மதியம் (மார்ச்.17) முதல் கோவை புறநகர் பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.</p>
<p data-start="177" data-end="467"><strong>இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை</strong></p>
<p data-start="469" data-end="717">குறிப்பாக தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, விராலியூர், தீத்திபாளையம்ஒத்தக்கால் மண்டபம், மதுக்கரை, மலுமிச்சம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழையுடன் சிறிய அளவிலான ஆலங்கட்டிகளும் (Hailstones) பெய்ததால் பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். சாலைகளில் சிதறிக் கிடந்த ஆலங்கட்டிகளை சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கைகளில் எடுத்து மகிழ்ச்சியுடன் பார்த்தனர். பலர் இதனை மொபைல் போன்களில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.</p>
<p data-start="993" data-end="1267">கடந்த சில நாட்களாக கடும் வெப்பத்தால் பயிர்கள் வாடும் நிலை ஏற்பட்டிருந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்த திடீர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு இருப்பதாகவும், தென்னை, வாழை மற்றும் காய்கறி பயிர்களுக்கு இது பெரும் பயனளிக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். கோடை வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த ஆலங்கட்டி மழை சற்றே நிவாரணத்தை அளித்துள்ளது.</p>