<p>பேஸ்புக்கில் வெளியான சர்ச்சை பதிவு காரணமாக ஒடிசா மாநிலத்தில் இரு மதப்பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்துள்ள நிலையில், பத்ரக் மாவட்டத்தில் வரும் 30ஆம் தேதி வரை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.</p>
<p><strong>ஒடிசாவில் தொடர் பதற்றம்:</strong></p>
<p>ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் அடிக்கடி மதக்கலவரம் ஏற்படும் என்பதால் பதற்றமான பகுதியாக பார்க்கப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், பேஸ்புக்கில் வெளியான பதிவு ஒன்று பெரும் வன்முறைகளுக்கு வழிவகுத்தது.</p>
<p>இதன் விளைவாக, சமூக விரோதிகள் பல கடைகளுக்கு தீ வைத்தனர். 450 கடைகள் தீக்கரையானது. 9 கோடி ருபாய் மதிப்புள்ள பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஒடிசா மாநில வரலாற்றில் இவ்வளவு நீண்ட காலம் ஊரடங்கு விதிக்கப்பட்டதே இல்லை.</p>
<p>இந்த நிலையில், பேஸ்புக்கில் வெளியான பதிவு ஒன்று, குறிப்பிட்ட மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாக புகார் எழுந்தது. புருணா பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போராட்டம் வெடித்தது. போராட்டம் கலவரமாக மாறியது.</p>
<p><strong>பேஸ்புக் பதிவால் வெடித்த கலவரம்:</strong></p>
<p>இதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் தடியடி நடத்தினர். நேற்று இரவு, பத்ரக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கல் வீச்சு சம்பவத்தின் போது சில அதிகாரிகள் காயமடைந்ததை அடுத்து கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர்.</p>
<p>இச்சூழலில், பத்ரக் மாவட்டத்தில் வரும் 30ஆம் தேதி வரை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில கூடுதல் தலைமை செயலாளர் சத்யபிரதா சாஹு வெளியிட்ட அறிக்கையில், "பத்ரக் மாவட்டத்தில், செப்டம்பர் 30ஆம் தேதி, அதிகாலை 2 மணி வரை, இணையம் மற்றும் WhatsApp, Facebook, X மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கும் அணுகுவதற்கும் உள்ள தடையை உள்துறை அமைச்சகம் 48 மணிநேரத்திற்கு நீட்டித்துள்ளது.</p>
<p>அதேசமயம், சமீபகாலமாக பத்ரக் மற்றும் தாம்நகர் பகுதிகளில் சமூக ஊடகப் பதிவுகள் காரணமாக பல்வேறு வன்முறை வகுப்புவாத சம்பவங்கள் நடப்பது மாநில அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அதேசமயம் வகுப்புவாத வன்முறையை பரப்புவதற்காக இணையத்தை தவறாகப் பயன்படுத்துவதாக மாவட்ட நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.</p>
<p>எனவே, பத்ரக் மாவட்டம் முழுவதும் பொது அமைதியை சீர்குலைத்து, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்கும் வகையில், மேற்கூறிய ஊடகங்களில் பதற்றத்தை தூண்டும் வகையில் செய்திகள் பரவாமல் தடுக்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p> </p>