<p>ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p>
<p>திருமணம் என்பது வாழ்க்கையின் அடுத்தக்கட்டம் என்ற நிலையில் அந்த உறவு அனைவருக்கும் சுமூகமாக அமைந்து விடுவதில்லை என்பதற்கு உதாரணமாக பல்வேறு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. தனி மனித தாக்குதல் தொடங்கி தகாத உறவு வரை நாளுக்கு நாள் இந்த பிரச்னை அதிகரித்து வருகிறது. இப்படியான நிலையில் இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்றுள்ளது. </p>
<p>அங்குள்ள துக்கிராலா மண்டலத்தின் சிலுவூர் என்ற கிராமத்தில் லோகம் சிவநாகராஜு என்பவர் வசித்து வந்தார். இவர் வெங்காய வியாபாரம் செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். கடந்த 2007ம் ஆண்டு லோகம் சிவநாகராஜூ லட்சுமி மாதுரி என்பவரை மணந்தார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த லோகம் சிவநாகராஜூ பொருளாதார ரீதியாக சற்று சிரமப்பட்டு வந்தார். இதனால் குடும்பத்தின் நிதித்தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு லட்சுமி மாதுரி விஜயவாடாவில் உள்ள ஒரு திரையரங்கில் டிக்கெட் கவுண்டரில் வேலைக்குச் சேர்ந்தார். </p>
<p>ஆனால் அதுதான் அவர்கள் வாழ்க்கையில் எதிராக மாறியது. அங்கு சட்டெனப்பள்ளியைச் சேர்ந்த கோபி என்ற நபரை லட்சுமி மாதுரி சந்தித்தார். இருவருக்குமிடையே தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் தனது கணவர் லோகம் சிவநாகராஜூ வெங்காய வியாபாரம் செய்து வருவதை லட்சுமி அவமானமாக கருதினார். அந்த தொழிலை கைவிடுமாறு தெரிவித்தார். </p>
<p>இதற்கிடையில் ஹைதராபாத்தில் கோபிக்கு ஒரு பிசினஸ் இருந்ததால் அங்கு தன் கணவரை அனுப்பி விட்டால் இங்கு கோபியுடன் தனிமையில் நேரம் செலவிடலாம் என லட்சுமி திட்டமிட்டார். ஆனால் சில நாட்களிலேயே லோகம் சிவநாகராஜூ ஹைதராபாத்திலிருந்து சிலுவுரு கிராமத்திற்கு திரும்பியதால் லட்சுமி அதிருப்தியடைந்தார். இதனையடுத்து கோபியுடனான தனது உறவுக்கு தடையாக இருந்த கணவரை கொல்ல லட்சுமி திட்டமிட்டார். </p>
<p>இந்த நிலையில் ஜனவரி 18ம் தேதி லட்சுமி மாதுரி வீட்டில் பிரியாணி தயாரித்துள்ளார். அதில் 20 தூக்க மாத்திரிகளை கலந்து கொடுத்தார். இதனை சாப்பிட்ட லோகம் சிவநாகராஜூ மயங்கி விழுந்தார். அன்று இரவு 11.30 மணிக்கு சிவநாகராஜூ மார்பில் ஏறில் கோபி அழுத்த மாதுரி முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே நாகராஜூ உயிரிழந்தார். கோபி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். </p>
<p>கணவரை கொலை செய்து விட்டோம் என்ற எண்ணம் துளி கூட இல்லாமல் லட்சுமி மாதுரி இரவு முழுவதும் சடலம் அருகே தனியாக அமர்ந்து செல்போனில் ஆபாச வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தார். அதிகாலை 4 மணிக்கு விழித்தது போல காட்டிக்கொண்டு தன் சக வீட்டாருக்கு போன் செய்து கணவர் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக நம்ப வைத்தார். லோகம் சிவநாகராஜூ இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த அவரின் நண்பர்கள் காதில் ரத்தம் மற்றும் அதன் அருகே காயம் இருப்பதை கவனித்தனர். உடனடியாக லோகம் நாகராஜூ தந்தையிடம் சொல்ல, போலீசில் புகார் தெரிவிக்கப்பட்ட பின் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. </p>