<div class="gs">
<div class="">
<div id=":nq" class="ii gt">
<div id=":t7" class="a3s aiL ">
<div dir="auto">
<div dir="auto" style="text-align: justify;">எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்றபின் தொடர் தோல்வியால் அதிமுக மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்து வருகிறது. மேலும் திருத்தப்பட்ட விதிகள் தொண்டர்களின் ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</div>
<h2 dir="auto" style="text-align: justify;"><strong>உயர்நீதிமன்ற மதுரைக் கிளை</strong></h2>
<div dir="auto" style="text-align: justify;">அ.தி.மு.கவின் கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர். அதில்," கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய தேர்தல் ஆணையம், நிபந்தனையுடன் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகாரம் செய்தது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட கட்சி விதிகள் தொண்டர்களின் உரிமைக்கு எதிரானதாக உள்ளது. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் தனக்கு 70 வயது ஆகிவிட்டதாகவும், உடல்நல குறைபாடு காரணமாகவும் தன்னால் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக இயலாது என எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டு இருந்தார். வாக்காளர்களிடம் அ.தி.மு.க கட்சி தனது ஆதரவை கணிசமாக இழந்தது. மேலும், தமிழகம் முழுவதும் இரண்டாம் வரிசைத் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி மற்ற கட்சிகளுடன் இனணந்து வருகின்றனர். ஏற்கனவே நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க கட்சி தொடர் தோல்வியை சந்தித்துவரும் நிலையில், வரும் தேர்தல்களிலும் உடல்நலக்குறைவு காரணமாக பிரச்சார பயணங்களை எடப்பாடி பழனிச்சாமியால் செய்ய இயலாமல் போகலாம். அவ்வாறான சூழலில் புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுப்பதற்கு, தற்போதைய விதிகளின்படி மற்றொரு தலைமையை தேர்வு செய்ய போர் எழும்.</div>
<h2 dir="auto" style="text-align: justify;"><strong>மோசமாக நிலையடைந்து வருகிறது</strong></h2>
<div dir="auto" style="text-align: justify;">கட்சியின் உறுப்பினர்களுக்கு தற்போது 2024ல் டிஜிட்டல் உறுப்பினர் அட்டைகள் ஜூன் 2023 தேதியிட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அ.தி.மு.க., தேர்தல் அரசியலில் மிக மோசமாக நிலையடைந்து வருகிறது. 2019 மக்களவைத் தோல்விக்குப் பிறகு, 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2021 மற்றும் 2022 இல் உள்ளாட்சித் தேர்தல்களிலும் இப்போது சமீபத்திய 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும் கட்சி தோல்வியை சந்தித்து வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் 2 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சி மொத்தம் 89 லட்சம் வாக்குகள் தான் பெற்றுள்ளது. இரண்டாம் மூன்றாம் இடங்களுக்கும் கட்சித் தள்ளப்பட்டுள்ளது.</div>
<h2 dir="auto" style="text-align: justify;"><strong>நடவடிக்கையும் இல்லை</strong></h2>
<div dir="auto" style="text-align: justify;">திருத்தப்பட்ட கட்சி விதிகள் படி 3 நபர்கள் தான் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியும். பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட 79 தலைமைக் கழகப் பதவி வகிப்பவர்களில் தமிழ் நாட்டில் உள்ள 75 மாவட்ட செயலாளர்கள் மட்டும் மூன்று நபர்களை பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட பரிந்துரை செய்யலாம். பிற மாநிலங்களில் கட்சி அமைப்பில் மாவட்ட செயலாளர்கள் பதவி கிடையாது ஒரிஜினல் விதிப்படி 5 வருடங்கள் உறுப்பினராக இருந்தாலே பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும். உண்மையான உள்கட்சி ஜனநாயகத்த்தை காக்கவும், அதிமுக அழிவிலிருந்து கட்சியை காப்பாற்றவும் 20.04.2023 அன்று தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட கட்சி விதிகளை ஏற்றுக் கொண்டதை மறுபரிசீலனை செய்து எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்த முடிவை மறுபரிசீலனை செய்ய கோரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமனம் செய்ததை மறுபரிசீலனை செய்யுமாறு அளித்த மனுவை பரிசீலிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.</div>
</div>
</div>
</div>
</div>
</div>