<p>உலகில் மிகவும் தாக்கம் செலுத்துகிற பிரபல நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் அனைவரும் ஒரு காலத்தில் இந்தியாவில் உள்ள ஒரு பள்ளியில் படித்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?</p>
<p>ஹைதராபாத்தில் உள்ள ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில்தான் <a href="https://www.hpsbegumpet.org.in/relations-2/">Hyderabad Public School (HPS)</a> மைக்ரோசாஃப்ட், அடோப், மாஸ்டர்கார்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் படித்துள்ளனர்.</p>
<p>193ஆம் ஆண்டு ஜாஹிர்தார் கல்லூரி என்ற பெயரில் இந்த கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. இங்கிலாந்தின் ஈடன் கல்லூரி மாதிரியில் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம், பின்னர் 122 ஏக்கர் வளாகமாக விரிவு செய்யப்பட்டது. பின்னர், தொழில்நுட்பம், வணிகம், நிதி, அரசியல், கலை உள்ளிட்ட பல்வேறு துறைசார் வெற்றிகரமான நிபுணர்களை இந்த கல்வி நிறுவனம் உருவாக்கி உள்ளது.</p>
<p><em><strong>யாரெல்லாம் இங்கு புகழ்பெற்ற முன்னாள் மாணவர்கள் தெரியுமா?</strong></em></p>
<p><strong>சத்யா</strong> <strong>நாதெள்ளா</strong></p>
<p>மைக்ரோசாப்டின் தற்போதைய தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்யா நாதெள்ளா, பொறியியல் மற்றும் வணிகத்தில் உயர் கல்விக்காக வெளிநாடு செல்வதற்கு முன்பு இங்குதான் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். ஹைதராபாத்தில் இருந்து உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்டைத் தலைமை தாங்கும் அவரது பயணம், உலகெங்கிலும் உள்ள இளம் நிபுணர்களுக்கு ஓர் உத்வேகம்.</p>
<p><strong>சாந்தனு</strong> <strong>நாராயண்</strong></p>
<p>அடோப் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண், இப்பள்ளியின் மற்றொரு முன்னாள் மாணவர் ஆவர். அடோப்பின் கிளவுட் அடிப்படையிலான சேவைகளுக்கு மாறுவதற்கும், டிஜிட்டல் அனுபவங்களில் அதன் தடத்தை விரிவுபடுத்துவதற்கும், லட்சக் கணக்கான மக்கள் தொழில்நுட்பத்தை தினமும் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை மறுவடிவமைப்பதற்கும் அவர் ஆற்றிய பணியின் அடித்தளம் இங்கேதான் உருவாக்கப்பட்டுள்ளது.</p>
<p><strong>அஜய்</strong> <strong>பங்கா</strong></p>
<p>மாஸ்டர் கார்டின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய அஜய் பங்கா, தனது பதவிக் காலத்தில் நிதி உள்ளடக்கத்தை முன்னுரிமையாக்கி, உள்ளடக்கிய வளர்ச்சிக்கான மாஸ்டர்கார்டு மையத்தை நிறுவினார். 2023 ஆம் ஆண்டில், அவர் உலக வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார், இது அவருக்கு உலகளாவிய வளர்ச்சியில் முக்கிய பங்கைக் கொடுத்தது. இவர் ஹைதராபாத் பப்ளிக் பள்ளி மாணவர்.</p>
<p><strong>பிரேம்</strong> <strong>வாட்சா</strong></p>
<p>ஃபேர்ஃபாக்ஸ் ஹோல்டிங்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பிரேம் வாட்சா, வெளிநாடு செல்வதற்கு முன்பு இந்தப் பள்ளியில்தான் பயின்றார். அவர் காப்பீடு, நிதி மற்றும் முதலீடுகளை உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். இதனால் இவர் "கனடாவின் வாரன் பஃபெட்" என்றும் குறிப்பிடப்படுகிறார்.</p>
<p><strong>பிற</strong> <strong>தலைவர்கள்</strong></p>
<p>பிராக்டர் & கேம்பிளின் சிஓஓ ஷைலேஷ் ஜெஜுரிகர்; கோப்ரா பீரின் நிறுவனர் பரோன் கரண் பிலிமோரியா; பிரிஸ்மா கேபிடல் பார்ட்னர்ஸின் நிறுவனர் கிரிஷ் ரெட்டி; மற்றும் பிரேம்ஜி இன்வெஸ்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி டி.கே. குரியன் ஆகியோரும், புகழ்பெற்ற ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் படித்தவர்கள்தாம்!</p>
<p><strong>பள்ளியின் இணைய முகவரி: <a href="https://www.hpsbegumpet.org.in/">https://www.hpsbegumpet.org.in/</a> </strong></p>